சந்தானம் ஹீரோவாக  நடிக்கும்  "இங்க நான்தான் கிங்கு".. பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் கமல்ஹாசன்!

Meenakshi
Feb 28, 2024,01:00 PM IST

சென்னை: சந்தானம் "இங்க நான் தான் கிங்கு" என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹசான்.


காமெடி நடிகராக கலக்கி வந்த சந்தானம், காமொடியில் கால் சீட் கொடுக்க முடியாத அளவிற்கு பிஸியாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று தெரிவித்து விட்டார். இவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் வெற்றி பெற்றாலும், ஒரு சில படங்கள் சரியாக போகவில்லை. இந்த நிலையில் கடைசியாக அவர்  வடக்குப்பட்டி ராமசாமி என்கிற படத்தில் நடித்தார். இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து மீண்டும் புதிய படங்களில் கமிட்டாக ஆரம்பித்துள்ளார் சந்தானம்.




கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான 'இங்க நான் தான் கிங்கு' முதல் பார்வையை உலகநாயகன் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.  அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.


அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளதாம். மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.  இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மறைந்த மனோபாலாவும் நடித்துள்ளனர். 




இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.   டி இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் கல்யாண் - பாபா பாஸ்கர். 


கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார். 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 



சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து கமலஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் அதில், எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ்  அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.