கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் பலி 35 ஆனது...விசாரணையை துவக்கிய சிபிசிஐடி

Manjula Devi
Jun 20, 2024,12:23 PM IST

கள்ளக்குறிச்சி:   கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதை அடுத்து, இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் நேற்று உயிரிழந்தனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.


இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 22 பேரும், சேலத்தில் எட்டு பேரும், புதுச்சேரியில் மூன்று பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்  பலர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. உயிரிழந்த 35 பேரில் 28 பேரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.




இப்பகுதிகளில்  கள்ளச்சாராயம் விற்றுவந்த கோவிந்தன் என்ற கன்னுக்குட்டி, அவருடைய தம்பி தாமோதரன், மற்றும் கோவிந்தன் மனைவி விஜயா ஆகிய மூவரின் மீது வழக்கு தொடரப்பட்டு போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ள சாராய விற்பனையை தடுக்க தொடர்ந்து போலீசார் ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


ஆட்சியர் மாற்றம்:


கள்ளச்சாராய மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது.அதேபோல  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.


கள்ளச்சாராய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:


கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் விற்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விசாரணையை அதிகாரி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் இன்று தொடங்கியுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது கள்ளசாராயம் விற்றதாக கூறப்படும் கருணாபுரம் பகுதியில் சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையை துரிதப்படுத்த சிபிசிஐடி அதிகாரி     ஐ ஜி அன்புவும் கள்ளக்குறிச்சி விரைந்துள்ளார்.