நடிகர் விஜய் மட்டுமே.. மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகிறார்கள்?.. டி. ஜெயக்குமார் சரமாரி கேள்வி!

Manjula Devi
Jun 20, 2024,05:27 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் குறித்து நடிகர் விஜய் மட்டுமே தனக்கு வாய்ப்பு அளித்த தமிழர்களின் உணர்வுக்கு குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகிறார்கள் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ  ஜெயக்குமார் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.


கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ள சாராயம் அருந்தியதில் வாந்தி, மயக்கம், வயிற்று வலி, உள்ளிட்ட காரணங்களால் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக 132 பேர் அனுமதிக்கப்பட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்ததாகவும், 94 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக தலா 10 லட்சம் நிவாரண தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய நிகழ்வு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் கூறியதாவது,  கள்ளச்சாராயத்தால் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது. 


இத்தனைக்கும் பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டுமே வாய்ப்பு அளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடை நேரங்களில் துணை நிற்க வேண்டும் என குரல் உணர்ந்து குரல் கொடுத்துள்ளார் மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர்..?


ஏழை எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இதுபோன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மான தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரை துறையைச் சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என கூறியுள்ளார்.


இருப்பினும் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் போன்றோர் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.