கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

Meenakshi
Jun 22, 2024,06:19 PM IST
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மெத்தனால்  கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் 193 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் தற்போது வரை 55 பேர் உயிர் இழந்துள்ளனர். மேலும் பலர் கிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.



55 பேர் உயிர் இழந்த நிலையில் மேலும்,  உயிரிழப்புக்கள் ஏற்படும் என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உறைந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்ததில் கண்பார்வை இழந்தவர்கள் 8 உள்ளனர். பார்வை இழந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து எற்பாடுகளும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர் விஜய் உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்ததுடன், டாக்டர்களிடமும் அவர்களது நிலை குறித்துக் கேட்டறிந்தார்கள். பலியானவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, கள்ளச்சாராய சாவுகள் நடந்து ஊரே சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் இந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடித்து தனது சிறு வயது மகளுடன் திண்ணையில் படுத்துத் தூங்கிய காட்சி பார்ப்போரை அதிர வைத்துள்ளது. அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு பொதுமக்களே அனுப்பி வைத்தனர். எத்தனை பட்டும் திருந்த மாட்டேன் என்று மக்களில் சிலர் இருப்பது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.