"உதயநிதி ஸ்டாலின் பற்றி இப்படி பேச மாட்டேன்".. கூட்டம் போட்டு ஸாரி சொன்ன மாஜி எம்எல்ஏ

Meenakshi
Oct 10, 2023,11:09 AM IST
கள்ளக்குறிச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை அவதூறாக பேசியதற்காக, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி பொதுக்கூட்டம் போட்டு வருத்தம் தெரிவித்துள்ளார் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ குமரகுரு.

கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா செப்டம்பர்19ம் தேதி மந்தைவெளி பகுதியில் நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு கலந்து கோண்டு பேசினார். அவர்  பேசும் போது முதல்வர்  ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநித் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து அவர் மீது  திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மாவட்டம் முழுவதும் திமுகவினர் அவர் மீது சரமாரியாக புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து குமரகுரு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.



இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் குமரகுரு மனு செய்தார். மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி, அக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கள்ளக்குறிச்சியில் நேற்று அதிமுக மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் குமரகுரு கலந்து கொண்டு பேசினார். 

அப்போது,  நான் கடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், உதயநிதி ஸ்டாலினை பற்றி தவறாக ஒரு வார்த்தை வந்து விட்டது. தவறான வார்த்தை என தெரிந்தவுடன் நான் பேசிய வார்த்தை தவறு என சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்தேன்.  அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் வெளியிட்டுள்ளனர். 

நான் பேசிய வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தால் அதற்கு இந்த கூட்டத்தின் மூலம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த காலத்திலும் நான் பேசும் வார்த்தை மற்றவர்கள் மனது புண்படும் வகையில் இருக்காது என்றார் குமரகுரு.

தமிழ்நாட்டில், தான் பேசிய அவதூறு வார்த்தைக்காக பொதுக்கூட்டம் போட்டு ஒருவர் வருத்தம் தெரிவித்தது இதுவே முதல் முறை என்பதால் குமருகுரு வரலாற்றில் இடம் பிடித்து விட்டார்!