"மருமகளுக்கு மாமியார் ஆசையா ஊட்டி விடணும்".. இப்படி ஒரு போட்டி.. கலகலத்த கள்ளக்குறிச்சி!

Manjula Devi
Mar 08, 2024,09:53 PM IST

கள்ளக்குறிச்சி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீனிவாசா ஹோட்டலில் மாமியார் மருமகள் ஒன்றாக இணைந்து ஊட்டி விட்டு சாப்பிடும் போட்டி தொடங்கியுள்ளது. மார்ச் 12ம் தேதி வரை இந்த ஆபர் இருக்கிறதாம். இப்படி மாமியாரும், மருமகளுமாக வந்து சாப்பிடும்போது சாப்பாடு இலவசமாக தருவார்களாம்.


ஹோட்டல்களில் இலவச உணவு என்று கொடுப்பது மற்ற ஹோட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான ஒரு சாமர்த்தியமான அணுகுமுறை ஆகும். இதன் மூலம் அதிக வாடிக்கையாளர்களை கவரவும், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்கவும் இதுபோன்ற ஐடியாக்களை செயல்படுத்துவார்கள். தொடர் விடுமுறை நாட்கள், அதாவது பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான் போன்ற பண்டிகையை முன்னிட்டு உணவகங்களில் ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அல்லது புதிதாக கடை திறந்தால் இப்படி ஆபர் தருவார்கள்.




அந்த வரிசையில் கள்ளக்குறிச்சி கச்சேரி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசா ஹோட்டலில் மாமியார் மருமகள் இணைந்து சாப்பிட்டால் விலையில்லா உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் மாமியார் மருமகளுக்கு ஊட்டி விடணுமாம்.. மருமகள் மாமியாருக்கு ஊட்டி விட வேண்டுமாம்.. நான் உங்க மைண்ட் வாய்ஸை கேச் பண்ணிட்டேன்.. என்னடா குமரேசா.. ஒரு நாயம் வேணாமாடா, இதெல்லாம் நடக்குமாடா என்ற வடிவேலின் காமெடி தானே நினைவுக்கு வருகிறது.


ஆனால் பாருங்க, இந்த ஆபருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.. பிறகென்னங்க.. இந்த ஹோட்டலுக்கு போய் மாமியார் மருமகள் ஒன்றாக இணைந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மாமியார் மருமகள் உறவை பலப்படுத்தி கொள்ளுங்கள். மகளிர் தினமான இந்த நன்னாளில் நாம் இருவரும் மனம் விட்டு பேசி, ஒன்றாக சாப்பிட்டு, ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டு, மாமியார் மருமகள் உறவை மிளிரச் செய்யுங்கள். உங்களின் ஈகோவை தூக்கி எறிந்து இனிவரும் தலைமுறையினருக்கு நீங்கள் எடுத்துக்காட்டாகவும் இருங்கள். இந்த மகளிர் தினம் உங்களின் ஒற்றுமைக்கு ஒரு வாய்ப்பாக இருக்கட்டும். மகளிர் தினத்தை கொண்டாடுங்கள். 


இந்த ஆஃபர் இன்று முதல் 12 ஆம் தேதி வரை மட்டுமே. இதை மிஸ் பண்ணாதீங்க. உடனே உங்க ஃபேமிலியோட ஹோட்டலுக்கு போங்க. உங்கள் உறவின் அஸ்திவாரத்தை பலப்படுத்துங்கள். சந்தோஷமாக சாப்பிடுங்கள். மகளிர் தினத்தை கொண்டாடுங்க. என்ஜாய் மாமியார்- மருமகளே..!


ஊட்டி விடும்போது சண்டை போட்டுக்காம சமத்தா ஊட்டி விடணும்.. ஊட்டி விடுகிற சாக்கில் குமட்டில் குத்தி விடாதீர்கள்!