தொடரும் மரணங்கள்.. கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு

Meenakshi
Jun 28, 2024,05:34 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது.


கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.கடந்த 18ம் தேதி  கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 229 போர் வரை பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




இவர்களில் நேற்று வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் 22 பேரும், விழுப்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் இதுவரைக்கும் 64 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்ற 40 வயதுடையவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்துள்ளார். இவருடன் சேர்த்து மொத்தம் 65 பேர் உயிர் இழந்துள்ளனர்.


இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சியினர் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கூறி வருகின்றனர். அத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக குழு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக குழுவினர், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஆளுநரை சந்தித்துப் பேசியும், மனு அளித்தும் வருகின்றனர்.