போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், கலெக்டர் இருந்தும்.. கள்ளச்சாராய கொடுமை.. எடப்பாடி பழனிச்சாமி!

Meenakshi
Jun 20, 2024,03:02 PM IST

கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சியின் மையப் பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்றுள்ளனர். கலெக்டர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என எல்லாமே அருகேதான் இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தி வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற  உடல் உபாதைகளால், பாதிக்கப்பட்டு 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில்,கள்ளக்குறிச்சி வந்த எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். 




அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. இதுவரை இறந்தவர்கள்  36 பேர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 133 பேர். இன்னும் பல பேர் இந்த கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டுள்ள தகவல் கிடைத்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவராக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். 


இந்த கள்ளச்சாராயம் விற்ற பகுதி கள்ளக்குறிச்சியின் மையப்பகுதி. இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றதற்கு அருகில் காவல் நிலையம் இருக்கிறது. நீதிமன்றம் இருக்கிறது. அதோடு இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைமை இடமாகவும் இருக்கிறது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இங்கே இருக்கின்றார். மாவட்ட ஆட்சித்தலைவரும் இங்கே இருக்கின்றார். உயர் அதிகாரிகளும் இருக்கின்றார்கள். இத்தனை பேர் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், இந்த கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது.


இதற்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருப்பதாக தெரிகிறது. அதற்கு ஆளுங்கட்சிக்கு துணையாக இருந்துள்ளது. மாநகர மையப்பகுதியில் இந்த கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்தது, மக்களிடையே மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் எவ்வளவு பேருக்கு சிகிச்சை பலன் தரும் என்று தெரியவில்லை. சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிலிருந்து ஒவ்வொருவராக இறக்க வேண்டிய சூழ்நிலை பார்க்கின்றபோது மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்திருக்கின்றோம். 


இதற்கு முன்பு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தார்கள். அப்பொழுது நான் விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்துவிட்டு பேட்டி கொடுத்தேன். அப்பொழுதே நான் சொன்னேன். தமிழகத்தில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அப்பொழுதே இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னேன்.


அப்பொழுதும் ஆளும் கட்சியின் அதிகார பலன் மிக்கவர்கள் ஆதரவோடு தான் இந்த கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றதாக கூறினேன். அப்பொழுதும் உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக கூறி, இறந்தவர்களுடைய நிலை பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க சிபிசிஐயிடம் ஒப்படைத்தார். இதுவரை என்ன ஆனது என்றே தெரியவில்லை. யார் யார் மேல் இவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள் என்று இதுவரை தெரியவில்லை.  இறந்தவர்கள் குடும்பத்திற்கு என்ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.