கள்ளக்குறிச்சி.. இதுவரை 47 பேர் பலி.. முக்கியக் குற்றவாளி மாதேஷ் கைது.. 3 பேருக்கு 14 நாள் சிறை!

Su.tha Arivalagan
Jun 21, 2024,09:23 AM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரை 14 நாள் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய பலர் உயிரிழந்ததால் தமிழ்நாடே பரபரப்பிலும், அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளது. பட்டப் பகலிலேயே சாராயம் காய்ச்சி விற்றுள்ளனர். காவல்நிலையத்துக்கு அருகிலேயே நடந்த இந்த அக்கிரமம் குறித்து பலமுறை புகார்கள் கொடுத்தும் காவல்துறையினர் சரிவர நடவடிக்கை எடுக்காமல் விட்டதால்தான் ஒரு பெரிய விபரீதமே நடந்துள்ளதாக மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின் தற்போதைய நிலவர விவரங்கள்:




3 பேர் கைது: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது தம்பி தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கள்ளக்குறிச்சி கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நேற்று முதல் இந்த விசாரணை தொடங்கியுள்ளது. இன்றும் சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.


முக்கியக் குற்றவாளி மாதேஷ் கைது: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதில் பலருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் தற்போது சென்னையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கும்போது பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


29 பேரின் உடல்கள் தகனம்: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 29 பேரின் உடல்கள் இதுவரை தகனம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 47 பேர் இறந்துள்ளதாக ஆட்சித் தலைவர் பிரஷாந்த் தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மொத்தம் 165 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது 118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


அதிமுக வழக்கு: கள்ளச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல அதிமுக, பாஜக சார்பில் தமிழ்நாட்டில் கண்டனப் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மறுபக்கம் கள்ளச்சாராய விவகாரத்தில் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர், எஸ்.பி உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதேபோல மது விலக்கு ஏடிஜிபி, எஸ்.பி ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.  நடந்த சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்று அரசும் விளக்கியுள்ளது.