கலாஷேத்திரா விவகாரம்.. "அந்த" வார்த்தையைச் சொல்லி ஆவேசம் காட்டிய நடிகை அபிராமி!

Su.tha Arivalagan
Apr 05, 2023,11:02 AM IST
சென்னை: கலாஷேத்திரா விவகாரத்தில், அந்த நிறுவனம் சம்பந்தப்படாதவர்கள் அதில் தலையிடக் கூடாது. அவர்களது கருத்துக்கள் தேவையில்லை.. உங்களது அசிங்கமான மூக்கை இங்கே நுழைக்க வேண்டாம் என்று நடிகையும் பிக்பாஸ் பிரபலமும் ஆன அபிராமி வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.

கலாஷேத்திரா பவுண்டேஷனுக்குட்பட்ட ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் பாலியல் தொல்லை தரப்பட்டதாக  சமீபத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக மாணவியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்ததால் இது தேசிய அளவில் பிரச்சினையானது.



இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலும் 3 ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்யவுள்ளதாகவும், முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவம் கலாஷேத்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ஆவேசமாக ஒரு பதிவைப் போட்டுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிராமி கூறியிருப்பதாவது:

கலாஷேத்திராவை துன்புறுத்துவதை நிறுத்துங்கள். எங்களது ஆசிரியர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்.  இரு பக்க நியாயத்தையும் கேளுங்கள். கலாஷேத்திராவுடன் தொடர்பில்லாதவர்கள் இந்த பிரச்சினையிலிருந்து விலகி நில்லுங்கள். எங்களுக்கு உங்களது கருத்துக்கள் தேவையில்லை. உங்களது அசிங்கமான மூக்கையும், கால்களையும் எங்களது நிறுவனத்துக்குள் நீட்ட வேண்டாம்.  பாலியல் தொந்தரவு தொடர்பான பதிவுகளை போடாதீர்கள் முட்டாள்களே.. முதலில் அதன் சரியான அர்த்தத்தை கூகுள் செய்து பாருங்கள். எனது கல்லூரிக்காக நான் குரல் கொடுக்கிறேன். உங்களது சுய நலனுக்காக அதை அசிங்கப்படுத்தாதீர்கள் என்று ஆவேசமாக குரல் கொடுத்துள்ளார் அபிராமி.

ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக டிவிட்டரிலும், பிற சமூக வலைதளங்களிலும் கடும் விவாதங்கள் நடந்து வருகின்றன. கலாஷேத்திரா விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் தற்போது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் யாரும் தேர்வு எழுத மாட்டோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். கல்லூரி தற்போது மூடப்பட்டுள்ளது. விரைவில் தேர்வுகள்  நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.