"கடவுள் பாதி.. மிருகம் பாதி.. கலந்து செய்த கலவை நான்".. மறுபடியும் மிரட்ட வரும் ஆளவந்தான்!

Su.tha Arivalagan
Nov 15, 2023,05:13 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி, டெக்னிக்கலாக மிரட்டிய ஆளவந்தான் திரைப்படம் 22 ஆண்டுகள் கழித்து உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் ஆகிறது. ஆயிரம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது இப்படம்.


ஆளவந்தான் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இந்தப் படம் தொடர்பாக பெரும் அதிருப்தியுடன் இருந்து வருகிறார் கலைப்புலி தாணு. இந்த நிமிடம் வரை கமல்ஹாசன் மீதான தனது கோபத்தைக் கொஞ்சம் கூட அவர் குறைத்துக் கொள்ளவில்லை. காரணம், ஆளவந்தான் படம் வணிக ரீதியாக வெற்றி பெறத் தவறியதால்.


ஆனால் அதன் திரைக்கதையும், படமாக்கவும், கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பும், டெக்னிக்கும் மிகப் பெரிய அளவில் அப்போது பேசப்பட்டது. அப்படத்தைத்தான் தற்போது திரைக்கதையில் மாற்றம் செய்து மீண்டும் வெளியிடுகிறார் கலைப்புலி தாணு.




உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இதில் கமல் இரட்டை வேடங்களில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரங்களான ஒருவர் கதாநாயகனாகவும், இன்னொருவர் வில்லனாகவும் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். தயாரிப்பாளர் தானுவின் வி க்ரியேஷன்  தயாரித்துள்ளது . சங்கர் எஹெசான் லாய் இசையமைத்துள்ளனர்.


ரவீனா தாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், பாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இப்படத்தில் கமல்ஹாசன் பேசிய பல வசனங்கள் பிரபலமானவை. குறிப்பாக "கடவுள் பாதி.. மிருகம் பாதி ..கலந்து செய்த கலவை நான்" என்று கமல்ஹாசனே பாடிய பாடல் மிகப் பிரபலமானது. படம் வெளியானபோது பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. காரணம் பலருக்கு கதை புரியவில்லை. இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படத்தில்தான் அதிநவீன டெக்னாலஜி முறையும் பயன்படுத்தப்பட்டது. அதாவது ஒரு சண்டைக் காட்சியில் நிஜ கதாபாத்திரங்களுடன், அனிமேஷனும் கலந்து மிரட்டியிருக்கும்.


கடந்த மாதம் நவம்பர் 3ஆம் தேதி கமல் நடித்த நாயகன் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இது கமல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது ஆளவந்தான் திரைப்படம் 1000 திரையரங்குகளில் வெளி வர உள்ளது. இப்படம் வெளிவந்து இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவடைந்தது. இப்படத்தின்  தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் பக்கத்தில் எழிலோடும்.. பொலிவோடும்.. ஆளவந்தான் திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என பதிவிட்டு  இப்படத்தின் போஸ்டரையும் பகிர்ந்து உள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கமல் ரசிகர்கள் சார்பில் புதுப்பொலிவுடன் திரைக்கதை மாற்றி அமைக்கப்பட்ட ஆளவந்தான் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!