ரஜினிகாந்த்திடம்.. கலைஞர் நினைவு ரூ. 100 நாணயத்தை நேரில் வழங்கிய.. பூச்சி முருகன்!

Meenakshi
Aug 22, 2024,01:24 PM IST

சென்னை:   நடிகர் ரஜினிகாந்திற்கு கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வழங்கப்பட்டது. இதனை திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார். 


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவின் நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை கடந்த 18ம் தேதி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை கலைவாணர் அரங்கில் வெளியிட்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டு நாணயத்திற்கான அனுமதி வழங்கியுள்ளார். இந்த நாணயம் திமுக தலைமை நிலையமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு நாணயம் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.




கலைஞர் படம் பொறித்த நாணயம் என்பதால், திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் ஆர்வமுடன் வங்கிச் செல்கின்றனர். ஆகஸ்ட் 20ம் தேதி மட்டும் 500 நாணயங்கள் 50 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்களை திமுக கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.


இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை நடிகர் ரஜினிகாந்திடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ்.முருகன் ரஜினிகாந்தின் இல்லத்தில் சென்று வழங்கியுள்ளார். நடிகர் ரஜினியும் அந்த நாணயத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்