பேனா சின்னம் அமைக்கும் பணிகள் தொடங்கிருச்சு.. அமைச்சர் தகவல்!

Aadmika
Aug 02, 2023,12:37 PM IST
சென்னை : கடலுக்கு நடுவே கலைஞர் பேனா சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெரீனாவில் இருந்து 360 மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் பேனா சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

134 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா வடிவ நினைவுச் சின்னத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடலுக்கு நடுவே பேனா சின்னம் அமைப்பதை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டன. 

ஆனால் திமுக.,வின் தொடர் முயற்சிக்கு பிறகு மத்திய சுற்றுச்சூழல் துறை பல நிபந்தனைகளுடன் பேனா சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் பேனா நிவைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட பணிகள் முதல்வரின் அனுமதி பெற்ற பிறகு விரைவில் துவங்கப்படும் என்றார். அதோடு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.