கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவிற்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது.. அரசு அறிவிப்பு!

Meenakshi
Sep 24, 2024,08:51 PM IST

சென்னை: கவிஞர் மு.மேத்தா, பின்னணிப் பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 


தமிழக திரை உலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களை போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் பெயரில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மாதம் மூன்றாம் நாள் அன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.




இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருந்தாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவு பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை செயல்படுத்துகின்ற வகையில், தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில், விருந்தாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர் திரைப்பட இயக்குனர் கரு பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டது. 


கடந்த 2022 ஆம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத்துறையில் தடம் பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆருர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை முதல்வர் மு.க ஸ்டாலின் முதுமை காரணமாக ஓய்வில் இருக்கும் ஆரூர்தாசின் இல்லத்திற்கே நேரில் சென்று 3.6.2022 அன்று இந்த விருதினை வழங்கி சிறப்பித்தார். 


அதோடு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப்  பெண்மையை போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரை கலைஞருக்கு இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.7.2024 அன்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும் கலைஞரால் பாராட்டப்பட்டவரும் ஆன கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25000க்கு மேற்பட்ட பலமொழி பாடல்களை பாடியவரும் தென்னிந்தியாவின் இசைக் குயில் என்றும், மெல்லிசை அரிசி என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்டவரும் மான திரைப்பட பாடகி பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு  கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்