சென்னைக்கு மேலும் ஒரு அட்ராக்ஷன்.. கலைஞர் நூற்றாண்டு பூங்கா.. இன்று முதல் என்ஜாய் பண்ணலாம்!

Manjula Devi
Oct 07, 2024,11:07 AM IST

சென்னை:  சென்னை கதீட்ரல் சாலையில் ரூ. 46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை இன்று மாலை 6:00 மணிக்கு திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


கடந்த ஆண்டு சுதந்திர விழாவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இதற்கான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது 46 கோடி மதிப்பீட்டில் பூங்கா முழுமை பெற்றுள்ளது.


இதில் கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகம், பசுமை குகை, மரவீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டிகம் முதலான சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.


இந்த நிலையில் இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:




தமிழ் இலக்கியம், கலை, கலாச்சாரம், என்று தமிழ் வளர்ச்சிக்கும் அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு காலம் வாழ்ந்து தமிழர் தம் வாழ்வில் நீங்கா இடம் பெற்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நினைவை போற்றுவதற்காக அவர் தம் பெயரில் சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது. 


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.8. 2023 அன்று சுதந்திர தின விழா உரையில் சென்னை கதீட்ரல் சாலையில் செங்காந்தள் பூங்காவிற்கு அருகே உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்கள். இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னர் ஒரு சங்கத்தின் கட்டுப்பாட்டில் தனியாரிடமிருந்தது. இதனைத் தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிலத்தில் சென்னை மாநகர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 27/2/2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 


இப்பூங்காவில் பறந்து விரிந்த பசுமை சூழலில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய அரிய வகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக அமைய திட்டமிடப்பட்டு அதற்கு செயல் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் மிகு சூழலுடன் கூடிய இப் பூங்காவின் நுழைவாயில் அருகில் அமைந்துள்ள உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞரின் கலைக்கூடம், தொடர்பொடி வளைப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்ட பாதை ஆகியவை இடம் பெற்றுள்ளன.


இதுதவிர, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்கிட் குடில், அரிய வகை கண்கவர் பூச்செடிகளால் காட்சியகப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளைக் கொண்ட பறவைகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மரவீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழல் கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம், மற்றும் சிற்றுண்டியகம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் இப்பூங்கா 45 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது இவற்றுடன் இப் பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பூங்காவை மேலும் அழகு படுத்துகின்றன. பூங்கா அனுபவித்தினை என்றென்றும் நினைவுக்கூரும் வகையில் நினைவு பரிசுகள் விற்கும் விற்பனை மையமும் உள்ளது. 


பெரியவர்களுக்கு ரூ. 100.. குட்டீஸ்களுக்கு ரூ. 50


இப்பூங்காவினை பார்வையிட நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 100, சிறியவர்களுக்கு ரூபாய் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூபாய் 250, சிறியவர்களுக்கு ரூபாய் 200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல 150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவு அளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூபாய் 150, சிறியவர்களுக்கு ரூபாய் 75 எனவும், மாலை நேரத்தில் இசை நீரூற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூபாய் 50, சிறியவர்களுக்கு ரூபாய் 50 எனவும், கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூபாய் 50 சிறியவர்களுக்கு ரூபாய் 40 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


குழந்தைகள் பங்கு பெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூபாய் 50 எனவும், புகைப்படக் கருவிகளுக்கு ரூபாய் 100 எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு ரூபாய் 5000 எனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நுழைவு கட்டணங்கள் 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லத்தக்கது. 


இணையதளத்தின் வாயிலாக நுழைவு கட்டணம் குறித்தான தகவல்கள் மற்றும் நுழைவுச்சீட்டினை https://tnhorticulture.in/kcpetickets பெறலாம். விரைவுத்துலங்கல் குறியீடு வழியாகவும் நினைவுச்சீட்டினை பெற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு  7.10. 2024 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்