அலங்காநல்லூர்.. கலைஞர் ஏறுதழுவுதல் ஸ்டேடியம் அதிரப் போகுது.. ஜனவரி 24ம் தேதி ஜல்லிக்கட்டு!

Manjula Devi
Jan 18, 2024,06:20 PM IST

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் ஸ்டேடியத்தை வரும் ஜனவரி 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறக்க வைக்கிறார். இதையொட்டி அங்கு சிறப்பு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.


இதில் பங்குபெறும் காளைகள் மற்றும் காளையர்கள் முன்பதிவு குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.


தமிழ்நாடு சட்டசபையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 சட்டமன்ற விதியின் கீழ், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு மேங்கிப்பட்டி கீழக்கரையில் மிகப்பெரிய ஸ்டேடியம் அமைக்கப்படும் என குறிப்பிட்டு இருந்தார். இதன்படி 67  ஏக்கர் பரப்பளவில் 44 கோடி செலவில் மிகப்பெரிய பிரம்மாண்ட ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது.




பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது ஜனவரி 24ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.


ஸ்டேடியத்தைத் திறந்து வைத்து அங்கு ஜல்லிக்கட்டுப் போட்டியையும் அவர் பார்த்து ரசிக்கவுள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டியில்  பங்குபெறும் காளைகள் மற்றும் வீரருக்கான  முன்பதிவு நாளை மற்றும் 20ம் தேதி நடைபெறும். ஆன்லைனில் இதைப் பதிவு செய்ய வேண்டும்.


போட்டியில் பங்கு பெற உள்ள காளைகள் மற்றும் காளையர்கள்   http://madurai.nic.in என்ற இணையதளம் வாயிலாக நாளை (19.1.24) மதியம் 12 மணி முதல் மறுநாள் (20.1.24) மதியம் 12 மணி வரை முன்பதிவு  செய்யலாம். மாடுபிடி வீரர்களுக்கான உடல் தகுதி சான்றிதழ்கள் மற்றும் காளைகளுக்கான தகுதி சான்றிதழ்கள் ஆகியவை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த சான்றிதழ்கள் சரிபார்ப்புக்குப் பின்பு டோக்கன்கள் வழங்கப்படும். அவர்கள் மட்டுமே 24 ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கு பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.