கத்தியுடன் மார்க்கெட்டில் மர்ம நபர் அட்ராசிட்டி.. சுட்டுப் பிடித்த போலீஸ்.. என்னாச்சு?

Baluchamy
Feb 06, 2023,04:06 PM IST
கல்புர்கி, கர்நாடகா: கையில் கத்தியுடன் மார்க்கெட்டில் அட்ராசிட்டி செய்த மர்ம நபர் ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கர்நாடக மாநிலம் கல்புர்கி நகரில் உள்ள பிஸியான மார்க்கெட் பகுதியில், ஒன்று நேற்று இரவு வழக்கமான நாள் போல் இயங்கி வந்தது. அப்போது "வாட்டசாட்டமான" மர்ம நபர் ஒருவர் கையில் இரு கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியபடி அங்கு வந்தார்.

அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் பயந்து போன பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு கையில் லத்தியுடன் விரைந்த போலீசார் முதலில் மர்ம நபரை சமாதானம் செய்ய முயற்சித்தனர். பொதுமக்களை அச்சுறுத்திய மர்ம நபர் போலீசாரையும் விடவில்லை. கையில் இருந்த கத்தியை வைத்து போலீசாரை நோக்கியும் தாக்குதல் நடத்த எத்தனிக்கவே போலீசார் விழிபிதுங்கி நின்றனர்.

இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மர்ம நபரின் காலில் சுட மர்ம நபர் சுருண்டு கீழே விழுந்தார். பின் கீழே விழுந்த மர்ம நபரை போலீசார் லத்தியால் வெளுத்தெடுத்தனர். அதன் பின்னர் அந்த நபரை அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் சேத்தன் கூறுகையில், மார்க்கெட் பகுதியில் மர்ம நபர் கத்தியால் பொதுமக்களை தாக்கியுள்ளார், பொதுமக்கள் முயன்றும் அவனை பிடிக்க முடியவில்லை. பின் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாதுகாப்பு காரணமாக துப்பாக்கியால் சுட்டு பிடிக்கவேண்டியாயிற்று. அந்த நபரின் பெயர் ஜாபர். அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்றார்.