சினிமா, அரசியலை.. விட்டு போக மாட்டேன்.. காடுவெட்டி  இசை வெளியீட்டு விழாவில்.. ஆர்கே சுரேஷ்!

Manjula Devi
Mar 04, 2024,03:09 PM IST

சென்னை: ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். நான்  சினிமா, அரசியலை விட்டு போக மாட்டேன். இது உணர்வு சார்ந்த படம் என காடுவெட்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர் கே சுரேஷ் அதிரடியாக பேசியுள்ளார்.


நடிகரும், தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் காடுவெட்டி. இப்படத்தை சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார். மஞ்சள் ஸ்க்ரீன்ஸ்  நிறுவனம் சார்பில், தா சுபாஷ் சந்திரபோஸ், கே. மகேந்திரன், என். மகேந்திரன், சி. பரமசிவம், ஜி.ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர் இணைந்து  இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு மா. புகழேந்தி ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.




இப்படத்தில் சங்கீர்த்தனா மற்றும் விஷ்மியா இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்களுடன் சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா சுப்ரமணியன், ஆகியோர் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படம் பெற்றோர்களின் வலியை சொல்லும் படமாக உருவாகியுள்ளதாம்.


இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் பேரரசு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், இயக்குனர்கள் மோகன் ஜி, ஆர் வி உதயகுமார், சோலை ஆறுமுகம், நடிகர் ஆர் கே சுரேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். 




இதில் கலந்துகொண்ட நடிகர் ஆர் கே சுரேஷ் படம் பற்றி கூறுகையில்,  என்னைப் பற்றி எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?




வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதி படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே என கூறினார்.