காணும் பொங்கல்.. களை கட்டியது தமிழ்நாடு.. சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனர்

Su.tha Arivalagan
Jan 17, 2023,09:12 AM IST

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் காணும் பொங்கல் களை கட்டியுள்ளது. சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்துள்ளனர்.

தமிழ்நாட்டின் கடற்கரைகள் அனைத்தும் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சென்னையில்தான் பொதுவாக காணும் பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்படும். பொங்கள் திருவிழாவின் கடைசி நிகழ்வாக இது ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.

சென்னையில் காணும் பொங்கலைக் கொண்டாட அக்கம் பக்கத்து மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். பலர் மாட்டு வண்டியில் வருவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் மக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக மெரீனா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, மாமல்லபுரம் உள்ளிட்ட அனைத்து கடலோரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்துள்ளனர்.

கடற்கரைகள் மட்டுமல்லாமல் வண்டலூர் உயிரியல் பூங்கா, சென்னை கிண்டி சிறார் பூங்கா என அனைத்து முக்கியப் பூங்காக்களிலும் கூட கூட்டம் அலை மோதுகிறது. மெரீனா கடற்கரையில் மக்கள் கூட்டம் கூடியிருப்பதால் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.


கடற்கரை காமராஜர் சாலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்,  அடையாரிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை ஆகியவை வழியாக திருப்பி விடப்படும். கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலை ஒரு வழிச் சாலையாக செயல்படும்.


விக்டோரியா ஹாஸ்டல் சாலையும் ஒரு வழிச்சாலையாக மாற்றப்படும். பாரதி சாலை சந்திப்பிலிருந்து வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும்.


சென்னையில் காணும் பொங்கலையொட்டி அதிக அளவில் மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு வழங்குவதற்காக 15,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  


சென்னையில் உள்ள அனைத்துக் கடல்களிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரீனா கடற்கரையில், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடலில் யாராவது சிக்கிக் கொண்டால் மீட்பதற்கு நீச்சல் வீரர்களும் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். டிரோன் கேமராக்கள் மூலமும் கூட்டத்தைக் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.