காணும் பொங்கல்.. இது அலையா இல்லை மக்கள் தலையா.. மெரீனா கடற்கரையை நிறைத்த கூட்டம்!

Meenakshi
Jan 17, 2024,06:37 PM IST

சென்னை: தமிழகம் முழுவதிலும் மக்கள் இன்று காணும் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி மகிழந்தனர். தமிழ்நாட்டின் அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக சென்னையில் கடற்கரைகள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி மகிழ்ந்தனர். 


பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. வட மாவட்டங்களில்தான் இது வழக்கமாக பிரபலமாக இருக்கும். இப்போது தமிழ்நாடு முழுவதும் இதை மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். 




காணும் பொங்கல் என்பது ஓய்வு மற்றும் மகிழ்ச்சியின் நாளாகும். இந்நாளில் மக்கள் குடும்பப் பயணங்கள் பிக்னிக், அண்டை வீட்டார் மற்றும் உறவினர் வீடுகளுக்கு செல்வது போன்றவற்றின் மூலம் தங்கள் நேரத்தை செலவிடுவதை குறிக்கிறது. குடும்ப உறவுகளை வலுப்படுத்த இந்த நாளை பலர் பயன்படுத்துகின்றனர். 


காணும் பொங்கலையொட்டி கோவில்கள், சுற்றுலாத்தலங்கள், கடற்கரைகள், பொது இடங்கள் என அநேக இடங்களில்  மக்கள் அதிகம் மாலை நேரங்களில் கூடி மகிழ்ந்தனர். உற்றார் உறவினர்கள், நண்பர்களோடு கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். 


சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். கடற்கரையில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடியும் , மணல் பரப்பில் வட்டமிட்டு அமர்ந்து பேசியும், உணவுகளை உண்டும் மகிழ்ந்தனர். பல்வேறு சுற்றுலா தலங்களிலும் மக்கள் குவிந்தனர். இதனால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.




வண்டலூர் உயிரியல் பூங்காவிலும் இன்று 25,000க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர். இதனால் வண்டலூர் பூங்கா முழுவதும் மக்கள் தலையாக காணப்பட்டது.  காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பல்வேறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.


சென்னை மட்டுமல்லாமல் திருச்சி முக்கொம்பு, கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகள், சுற்றுலாத் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.. புதுச்சேரி கடற்கரை, கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் கூடி மகிழ்ந்தனர்.