அந்த 15 பேரை மீற முடியாது.. தம்மடித்தால் கூட கதை முடிந்தது.. மலையாள சினிமாவின் மறுபக்கம்!

Su.tha Arivalagan
Aug 19, 2024,06:21 PM IST

திருவனந்தபுரம்: மலையாளத் திரையுலகில் 10 முதல் 15 பேர்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என இவர்கள் அடங்குவர். இவர்களை பகைத்து்க கொண்டு அங்கு யாருமே தொழில் செய்ய முடியாது. அவர்களை மீறி செயல்பட முயன்றால் கதையை முடித்து விடுவார்கள் என்று நீதிதி கே.ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மலையாளத் திரையுலகில் நிலவும் பிரச்சினைகள் குறித்து குறிப்பாக  நடிகைகள், பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்பட்டது. நீதிபதி கே ஹேமா தலைமையிலான இந்தக் கமிட்டியின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பதற வைக்கும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதிலிருந்து சில தகவல்கள்:


மலையாளத் திரையுலகில் 10 முதல் 15 வரை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அத்தனை பேருமே ஆண்கள். நடிகர்கள், இயக்குநர்கள், கேமராமேன்கள், தயாரிப்பாளர்கள் என இவர்கள் அடக்கம். இவர்களை பகைத்துக் கொண்டால் கதை முடிந்தது. உதாரணத்திற்கு இந்த குரூப்பைச் சேர்ந்த நடிகர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும். எதிரில் நின்று தெரியாமல் கூட தம்மடித்து விட முடியாது. அப்படிச் செய்தால் வன்மம் வைத்து காலி செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு ஈகோ பிடித்தவர்கள் இந்த நடிகர்கள். மலையாள நடிகர் சங்கமான அம்மாவிலும் இவர்கள் ஆதிக்கம் அதிகம். இவர்களின் கொடுமையால் ஒரு நடிகர் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு சீரியல்களில் நடிக்கப் போனார். ஆனால் அங்கும் ஆத்மா என்ற சங்கம் உள்ளது. அங்கும் இந்த நடிகர்களின் ஆதிக்கம்தான் உள்ளது. இதனால் அந்த நடிகர் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டி வந்தது. இத்தனைக்கும் அவர் முன்னணி நடிகர், சிறந்த நடிகரும் கூட. அவருக்கே இந்த கதி.




2020ம் ஆண்டு முதல் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சரிவர ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. அதை இந்த 15 பேர் கொண்ட குழு விரும்பவில்லை. இதனால் பல படங்களில் கலைஞர்கள் முறையான ஒப்பந்தம் இல்லாமலேயே நடிக்கின்றனர். இதை ஒரு இயக்குநர் எதிர்த்துள்ளார். அவர் பிரபலமானவர். வருடத்திற்கு 3, 4 படங்கள் வரை இயக்கி வந்தவர் அவர். அவரை கட்டம் கட்டி காலி செய்து பீல்டை விட்டு விரட்டி விட்டது இந்த குழு.


இதேபோல ஒரு நடிகரை ரூ. 40 லட்சம் சம்பளத்திற்கு புக் செய்திருந்தனர். ஆனால் அவர் சொன்னபடி நடித்துக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் மீது புகார் கிளப்பி விசாரணக்கு முடிவெடுத்தனர். ஆனால் அந்த நடிகர் கடைசி வரை நடிக்கவே முடியாது என்று கூறி விட்டார். காரணம் கேட்டபோது இயக்குநர் சரியில்லை, அவரை மாத்துங்க நடிக்கிறேன் என்று கூறி விட்டார். அவர் இந்த 15 பிரபலங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி இப்படி நடந்து கொண்டதால் தயாரிப்பாளரால் எதுவும் செய்ய முடியாமல் போனதாம். 


அதை விட கொடுமையாக இந்த விசாரணையை நடத்தி மேக்டா கமிட்டியிலிருந்து உறுப்பினர்களை ராஜினாமா செய்யவும் வைத்துள்ளார் இந்த நடிகர். இதனால் மேக்டா கமிட்டியே காலியாகி விட்டதாம். அத்தோடு நில்லாமல் பெப்கா என்ற புதிய அமைப்பை இந்த நடிகர் தனது ஆதரவு வட்டத்தோடு சேர்ந்து தொடங்கியுள்ளார். இதற்கெல்லாம் பின்னணியில் அந்த பவர்புல் குரூப் இருந்துள்ளது. அம்மா சங்கத்தில் உள்ள பல்வேறு நடிகர்கள், இந்த பெப்கா அமைப்பு சேர்ந்து பல காரியங்களை சாதித்துள்ளனராம். இவர்களை எதிர்த்து யாராலும் எதுவுமே செய்ய முடியாதாம்.