நான் ஆக்ஷன் நாயகனா.. என்னாலேயே நம்ப முடியலைங்க.. சூப்பர் அனுபவம்.. நடிகர் வருண் செம ஹேப்பி!

Manjula Devi
Feb 27, 2024,03:08 PM IST

சென்னை: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் ஆக்சன் நாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்ப முடியாத அனுபவமாக இருந்தது என நடிகர் அருண் மனம் திறந்து பேசி உள்ளார். இப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.


இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும்,தயாரிப்பாளராகவும் எழுத்தாளராகவும், வலம் வருபவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் படங்களையும் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் விமர்சன ரீதியாக மக்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. 




குறிப்பாக  மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், வாரணம் ஆயிரம் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். வாரணம் ஆயிரம் படத்திற்காக இவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார். தற்போது பல படங்களில் நடித்தும் வருகிறார்.  இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலானவை ரொமான்டிக் கதைக்களத்தையே கொண்டிருக்கும். ஆனால் தற்போது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமான  ஜோஸ்வா இமைப்போல் காக்க என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார். 


வளர்ந்து வரும் நாயகன் நடிகர் வருண் இதில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகன் ஆவார். இவர் ஆண்டோனியின் ஒருநாள் இரவில் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர். பின்னர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர். 


இதனைத் தொடர்ந்து ஜோஸ்வா இமைப்போல் காக்க திரைப்படத்தில் நாயகனாக தனது கதாபாத்திரங்களை மிகவும் திறமையாகவும் ,நேர்த்தியாகவும், வெளிப்படுத்தி ஆக்ஷன் ஹீரோவாக நடித்து அசத்தியுள்ளார். இப்படத்தில் ராஹே , கிருஷ்ணா முதன் முறையாக வில்லனாகவும் நடித்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். கார்த்திக் இசையமைத்துள்ளார்.




படப்பிடிப்பு முற்றிலும் நிறைவடைந்து வரும் மார்ச் 1ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. கௌதம் மேனன் இயக்கிய இப்படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் படம் ரிலீஸ்காக காத்து கொண்டுள்ளனர்.


இப்படத்தைப் பற்றி நடிகர் வருண் கூறுகையில்,கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது.  




அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.


'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.