Jokes: "சேலையில காபியைக் கொட்டிட்டாரு.. வச்சு தொவச்சுட்டேன்ல"

Meena
Oct 28, 2023,06:28 PM IST

- மீனா


சென்னை: உலகத்திலேயே மிகப் பெரிய அறிவாளி யாருன்னு ஒரு கணவரிடம் போய் கேட்டா, என் மனைவிதான்னு டக்குன்னு கண்ணை மூடிட்டு சொல்வாரு... (அந்த மூடிய கண்களுக்குள் அடுத்த வேளை சோறு.. இத்யாதி இத்யாதி எல்லாம் மின்னல் வேகத்தில் டூர் அடிச்சுட்டு போகும்.. அது நமக்கு அனாவசியம்).


உண்மையில் ஆண்களை விட பெண்கள் புத்திசாலிங்கதான்.. அதனால்தான் பல குடும்பங்கள் நல்லா பேலன்ஸ்டா வாழ்ந்துட்டு இருக்கு.. இல்லாட்டி ரொம்பக் கஷ்டம்தாங்க...!


சரி வாங்க ஜாலியா நாலு ஜோக்ஸ் பார்த்துட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போவோம்.


நல்லா பாரு.. எல்லாப் பேரும் கூடவே இருக்காங்க பாரு!




கணவன்: ஏண்டி எப்ப பாத்தாலும்  சொந்தக்காரங்களை திட்டிக்கிட்டே இருக்க.

மனைவி: அப்புறம் நல்லா இருந்தா மட்டும் உடனே வந்துடுறாங்க. நம்ம  கஷ்டத்துல யாராவது நம்ம கூட இருக்கிறாங்களா ?

கணவன்: இதான் உன் பிரச்சனையா. இரு வரேன் 

மனைவி: எங்க போறீங்க ?

கணவன்: நம்ம கல்யாண ஆல்பத்தை எடுத்துட்டு வர

மனைவி: ஏன்?

கணவன்:  "கஷ்டமான நேரத்துல" எல்லா சொந்தக்காரங்களும் நம்ம பக்கத்துல தான் நிக்கிறாங்கனு நிரூபிக்கத்தான் 

மனைவி:😡😡


நல்லா தொவச்சுட்டேன்ல!




தோழி 1: என்ன புது சேலை கட்டிட்டு வரேன்னு சொன்ன.. சேலை புதுசு மாதிரி இல்லையே

தோழி 2: ஆமா புது சேலையில என் கணவர் காஃபிய கொட்டி  கறையாக்கிட்டாரு.

தோழி1: துவைக்க வேண்டியது தானே

தோழி 2: துவைக்காமல் விடுவேனா

 தோழி1: பரவாயில்லையே உடனே துவைச்சிட்டியா

தோழி 2: பின்ன விடுவேனா.. துவைச்சு எடுத்ததுல.. இப்போ கணவர் பேச்சு மூச்சு இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறார்.

தோழி 1: அடிப்பாவி!🫢


அது கோபம்.. இது கொலை வெறி!




மகன்: "அப்பா டாடி" கோபத்திற்கும், கொலை வெறிக்கும் என்ன வித்தியாசம்

அப்பா: ஏன்டா "சன் மகனே", உனக்கு இப்போ இப்படி ஒரு  சந்தேகம்.

மகன்: எப்ப பாத்தாலும் "மம்மி அம்மா"  கோபப்பட்டு, எனக்கு கொலைவெறி ஆகிரும்னு  சொல்றாங்கல்ல அதனால் தான் கேட்டேன் 

அப்பா: தீபாவளிக்கு உங்க அம்மா டிரஸ் வாங்கும் போது ஒரு கடையில இருக்கிற எல்லா.. சேலையையும் பார்த்துட்டு ஒரு சேலை மட்டும் வாங்குனா அதுக்கு பேரு கோவம்.

மகன்: அப்போ கொலை வெறினா 

அப்பா: ஒவ்வொரு கடையா ஏறி இறங்கி எல்லா  சேலையையும் போய் பார்த்துட்டு ஒரு சேலை கூட வாங்கலைன்னா அதுக்கு பேருதான் கொலைவெறி மகனே.

மகன்:😳


டபுள்  லைக் பண்றேனே பாஸ்!




நபர் 1: என் போஸ்ட்டை நீங்கள் படிக்கிறீங்களா இல்லையா.

நபர் 2: ஏன் இப்படி கேக்குறீங்க.

நபர் 1: இல்ல, லைக் பண்ணி ஃபாலோ பண்ண மாட்டேன்றீங்களே அதான் கேட்டேன்.

நபர் 2: அட ஏங்க நீங்க வேற.. உங்க எல்லா போஸ்டையும் எல்லாம் படிச்சிட்டு நல்லா இருக்குன்னு லைக்கையும் , ஃபால்லோவையும் ஒன்னுக்கு இரண்டு தடவை அழுத்துறேனே

நபர் 1: என்னாது.. ஒன்னுக்கு ரெண்டு வாட்டியா😲

நபர் 2: ஆமா இதுல என்ன சந்தேகம்.

நபர் 1: அட நாறப்பயலே..!