இந்தியா வேண்டாம்.. "பாரத்"னு மாத்துங்க.. அன்றே சொன்ன முகம்மது அலி ஜின்னா!

Su.tha Arivalagan
Sep 06, 2023,10:59 AM IST
டெல்லி: தேசப் பிரிவினையின்போது இந்தியா என்ற பெயரை நமக்கு வைக்க முகம்மது அலி ஜின்னா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இந்தியா என்ற பெயருக்குப் பதில் இந்துஸ்தான் அல்லது பாரத் என்று பெயர் வைக்குமாறு அவர்தான் வெள்ளையர்களுக்குப் பரிந்துரைத்தார். ஆனால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நமது பெயர் இந்தியா என்றே நிலைத்து விட்டது.

நாடுகளுக்குப் பெயர் சூட்டுவது என்பது ஒரு வகையில் வரலாறாகவே உள்ளன. நாடுகளைப் பிரிக்கும்போது பெயர் சூட்டுவது மிகப் பெரிய தலைவலியாகவும் மாறுவதுண்டு. கிரீஸ் மற்றும் மாசிடோனியா ஆகிய இரு நாடுகளும் தங்களது நாட்டுப் பெயருக்காக கடந்த 27 வருடமாக மோதலில் ஈடுபட்டுள்ளன.  காரணம், கிரீஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் இடம் பெற்றுள்ள நகரத்தின் பெயர் மாசிடோனியா. இதனால் மாசிடோனியா நாடு அந்தப் பெயரை வைத்திருக்கக் கூடாது என்று கிரீஸ் கூறி வருகிறது.  இதை மாசிடோனியா நிராகரித்து வருகிறது. 



கிட்டத்தட்ட இதேபோன்றதொரு மோதல்தான் நமது நாட்டின் பிரிவினையின்போதும் ஏற்பட்டது. இந்தியாவை இரண்டாகப் பிரித்து பாகிஸ்தான் என்று புதிய நாட்டை உருவாக்க ஒப்புக் கொண்டபோது, இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்று மெளன்ட்பேட்டனிடம், முகம்மது அலி ஜின்னா வலியுறுத்தினார். பிரிவினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்ப்படுவதற்கு முன்பே பல்வேறு சமயங்களில் இந்தியா என்ற பெயரை தொடர்ந்து ஆட்சேபித்து வந்தார் ஜின்னா. 

அதற்கு அவர் கூறிய காரணம், சிந்து நதி மற்றும் சிந்து சமவெளி ஆகியவற்றை உருவாக்கப்பட்ட பெயர்தான் இந்தியா. இப்போது இந்தப் பிராந்தியம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அப்படி இருக்கும்போது இந்தியா என்ற பெயர் அவர்களுக்குப் பொருத்தமானது கிடையாது. எங்களது பகுதியின் பெயரை அவர்களது நாட்டுப் பெயராக வைத்திருப்பது சரியல்ல. எனவே இந்தியா என்ற பெயரை இந்துஸ்தான் அல்லது பாரத் என்று மாற்ற வேண்டும் என்றார்.

ஆனால் ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியும் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது. மெளன்ட் பேட்டனுக்கும் கூட, ஜின்னாவைப் பிடிக்காது. இதனால் அவரும் ஜின்னாவின் கோரிக்கையைப் புறம் தள்ளி விட்டார்.

இருப்பினும் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில், ஆர்ட்டிக்கிள் 1ல் முதல் வரியே "India, that is Bharat" என்றுதான் ஆரம்பிக்கும். அரசியல் சாசன சட்டத்தில் இந்தியா, பாரத் ஆகிய இரு பெயர்களும் ஏற்கனவே இருக்கத்தான் செய்கின்றன. ஆர்ட்டிக்கிள் 1ன் முதல் வரியே "India, that is Bharat" என்றுதான் ஆரம்பிக்கும். இந்திக்காரர்கள் பாரத் என்றும் இந்துஸ்தான் என்றுதான் பெரும்பாலும் சொல்வார்கள். இந்தி மொழி பேசாதவர்கள்தான் அதிக அளவில் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே இந்தியா, பாரத் ஆகிய இரு பெயர்களுமே ஏற்கனவே புழக்கத்தில் இருந்து வருபவைதான். சர்ச்சையும் ஆனதில்லை இதுவரை. ஆனால் என்றைக்கு எதிர்க்கட்சிகள் கூடி புதுக் கூட்டணி அமைத்து பெயரை இந்தியா என்று வைத்தார்களோ, அன்று முதலே பாஜகவினர் இந்தியா என்ற பெயரை தவிர்க்க ஆரம்பித்து விட்டனர். பாரத் என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர். இது  வேகமாபப்  பரவி இன்று நாட்டின் பெயரை மாற்றப் போவதாக செய்திகள் வெளியாகும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.

அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது நாட்டின் பெயரை இந்தியா என்கிற பாரத் என்றே வரையறுத்தனர். எனவே இந்தியா என்ற பெயரும், பாரத் என்ற பெயரும் ஒன்றாக இணைந்தே பயணித்து வருகின்றன. இடையில்தான் அரசியல் புகுந்து இப்போது குழப்பியடிக்க ஆரம்பித்துள்ளது.