ஜக்கிய ஜனதாதளத்திற்குள் குழப்பம்.. மத்திய அரசை விமர்சித்த செய்தித் தொடர்பாளர் தியாகி ராஜினாமா!

Su.tha Arivalagan
Sep 01, 2024,11:35 AM IST

பாட்னா:  மத்தியில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்குள், பாஜகவுக்கு எதிரான போக்கு தலை தூக்க ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பாஜக குறித்து விமர்சித்த ஐக்கிய ஜனதாதளம் கட்சியிந் மூத்த தலைவரான செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.


அவராக ராஜினாமா செய்திருக்க வாய்ப்பில்லை, கட்சித் தலைமை தலையிட்டு அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மத்தியில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த ஆட்சிக்கு முக்கியமான ஆதரவு யார் என்றால் அது தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதாதளமும்தான். இந்த இரு கட்சிகளும் கொடுத்து வரும் ஆதரவு, பாஜகவுக்கு முக்கியமானதாக உள்ளது.




இந்த நிலையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்குள் பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன. அதிருப்தி கிளம்ப ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  ஐக்கிய ஜனதாதளம்  கட்சியின் செய்தித் தொடர்பாளரான மூத்த தலைவர் கே.சி. தியாகி, மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்டம், பொது சிவில் சட்டம், காஸா போர் உள்ளிட்டவை குறித்து பாஜகவை விமர்சித்து கருத்துக்கள் தெரிவித்து வந்தார். இது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இந்த பின்னணியில் திடீரென தனது செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தியாகி. அவருக்குப் பதில் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் புதிய செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


பாஜக தலைமையை சரிக்கட்டும் வகையில் தியாகியை, முதல்வர் நிதீஷ் குமாரே ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காகவே தியாகி விலகியதாக ஐக்கிய ஜனதாதளம் கட்சி விளக்கியுள்ளது.


சமீபத்தில் தியாகி இஸ்ரேல் தாக்குதல் குறித்து பல்வேறு முன்னாள் எம்.பிக்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கை விட்டிருந்தனர். அதில் தியாகியும் ஒருவர். அதில், பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்களையும், நீதியையும் மீறும் இன அழிப்பு செயல் இது என்று கண்டித்திருந்தனர். இந்த இனப்படுகொலை குறித்து இந்தியா மெளனமாக இருப்பது நல்லதல்ல என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.


இது பாஜகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்தே தற்போது தியாகி வெளியேறியுள்ளார். தியாகி வெளிப்படையாக பேசக் கூடியவர் என்பதால் அவரது கருத்துக்களை பாஜகவினர் ரசிப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்