கர்நாடக காங்கிரஸ் உடையும்.. 60 எம்எல்ஏக்கள் தாவப் போகிறார்கள்.. குண்டைப் போடும் குமாரசாமி!

Su.tha Arivalagan
Dec 11, 2023,05:30 PM IST

ஹசன்: கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி விரைவில் கவிழப் போகிறது. 50 முதல் 60 எம்எல்ஏக்கள் வரை விரைவில் கட்சி தாவுவார்கள் என்று குண்டைப் போட்டுள்ளார் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி. குமாரசாமி.


இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைந்தது. காங்கிரஸ் கட்சியும் குமாரசாமிக்கு ஆதரவு தந்து கூட்டணி ஆட்சியமைத்தது. ஆனால் பாஜகவின் அதிரடித் திட்டத்தால் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவினர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அப்படித்தான் கடந்த பாஜக ஆட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தது.





இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சியமைத்துள்ளது. முதல்வர் பதவிக்கு டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதும் கூட கட்சி மேலிடம் இருவரையும் அழைத்துப் பேசி சுமூகமாக முடிவுக்கு வந்தது அந்தப் பிரச்சினையும். சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.


இந்த நிலையில்தான் திடீரென குண்டைப் போட்டுள்ளார் குமாரசாமி. கர்நாடக மாநிலம் ஹசன் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசினா். அப்போது கூறுகையில், ஒரு அமைச்சர் தலைமையில் 50 முதல் 60 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேரப் போகிறார்கள். கர்நாடக அரசு விரைவில் கவிழும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருமே நேர்மையானவர்கள் கிடையாது. அவர்கள் யாருக்குமே விசுவாசமும் கிடையாது என்றார் குமாரசாமி.


பாஜகவின் சூழ்ச்சியால் ஆட்சியைப் பறி கொடுத்தவரான குமாரசாமி இப்போது பாஜக கூட்டணியில்தான் இருக்கிறார். இந்த நிலையில் பாஜகவிடம் ஒரு அமைச்சர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேரப் போவதாக அவர் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.