ஜெயலலிதாவின்  நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்: பெங்களூர் கோர்ட்

Meenakshi
Jan 23, 2024,05:40 PM IST

பெங்ளூரு: ஜெயலலிதாவின்  நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என  பெங்களூர் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


1996ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து தங்கம், வெள்ளி, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வழக்கு விசாரணை பெங்களூரு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டது. 


வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் காலமானார். அவர் குற்றவாளி என உயர்நீதிமன்றம் உறுதிசெய்த நிலையில், நகைகள் பெங்களூரில் தான் இருந்தது.




இவ்வழக்கு தொடர்பாக, பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர், ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும், அதில் கிடைக்கும் பணத்தில் நலத்திட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனக்கு இதில் உரிமை உண்டு எனவும், நகைகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். 


இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை  விசாரித்த நீதிபதி ஹெ.ஏ.மோகன் கூறுகையில், நகைகளை ஏலம் விடுவதற்கு பதிலாக, தமிழக அரசின் உள்துறை மூலமாக தமிழ்நாட்டுக்கு மாற்றுவது நல்லது என்று நான் கருதுகிறேன். ஆகவே தமிழக அரசு செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை நியமித்து அவர் மூலமாக போலீசாருடன் இணைந்து நகைகளை பெற்றுக்கொள்ள வருமாறு உத்தரவிடுகிறேன் என்று தெரிவித்தார்.