சாலை விபத்து.. முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மருமகள் பலி.. மகன் படுகாயம்

Su.tha Arivalagan
Jan 31, 2024,10:55 AM IST

ஆல்வார்: முன்னாள் மத்திய அமைச்சரான ஜஸ்வந்த் சிங்கின் மகனும், மருமகளும் சென்ற கார் சாலை விபத்தில் சிக்கியது. இதில் மருமகள் பலியானார், மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜஸ்வந்த் சிங். நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவர். மறைந்த வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவர். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காந்தஹாருக்கு தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் நடந்தது. கார்கில் போரையும் பார்த்தவர் ஜஸ்வந்த் சிங்.




இவரது மகன் மன்வேந்திர சிங், அவரது மனைவி பெயர் சித்ரா சிங். மன்வேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். தனது மனைவியுடன் மன்வேந்திர சிங் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் நோக்கி காரில் போய்க் கொண்டிருந்தார்.  அப்போது டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில், ஆல்வார் அருகே சாலை விபத்தில் கார் சிக்கியது. படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சித்ரா சிங் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மன்வேந்திர சிங் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


கார் டிரைவர் நரேந்திராவும் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக போய் சாலையோரமாக இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் நடந்துள்ளது.