கிலோ ரூ.3000.. என்னான்னு கேட்குறீங்களா... அட  நம்ம மல்லி பூ தானுங்க.. ஆத்தாடி!!

Meenakshi
Feb 10, 2024,02:13 PM IST

திண்டுக்கல்: தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ மல்லிகை பூ ரூ.3000க்கு விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தை மாதம் என்றாலே விசேஷங்கள் அதிகம் இருக்கும். திருமணம், புதுமனை புகுவிழா, காதுகுத்து விழா உள்ளிட்ட அனைத்து விஷேசங்களும் வைப்பதற்கு உகந்த மாதமாக தை மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் சற்று பனியும் அதிகமாக பொழியும் என்பதால் பூக்களின் வரத்து குறைந்தும், அத்துடன் பூ தேவையும் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை சற்று அதிகமாகவே இருக்கும். 


திண்டுக்கல் மாவட்டத்தை  சேர்ந்த பகுதிகளான குட்டத்து ஆவாரம்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் அதிகம் ஈடுபட்டு வருகின்றன. இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.




திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தஞ்சை, சென்னை, ஈரோடு, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கிருந்து கேரளாவிற்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு. இந்த மாதம் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது. தை மாத கடைசி முகூர்த்தம் என்பதால் பூ தேவையும் அதிகம் இருப்பதால் மல்லிகை பூ கிலோ ரூ.3000த்திற்கு விற்கப்பட்டு வருகிறது. 


கனகாம்பரம், முல்லைப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி பூ, மரிக்கொழுந்து, காக்கரட்டான் உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் இன்று அதிகமாவே உள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பூ தேவை இருப்பதனால் திண்டுக்கல் மார்கெட்டில் பொதுமக்களின் கூட்டமும் சற்று அதிகமாகவே உள்ளது.