ஹோலி கொண்டாட்டத்தின்போது.. துன்புறுத்தப்பட்ட பெண்.. இந்தியாவிலிருந்து வெளியேறினார்

Su.tha Arivalagan
Mar 11, 2023,10:01 AM IST
டெல்லி: டெல்லியில் நடந்த  ஹோலி கொண்டாட்டத்தின்போது சில இளைஞர்களிடம் சிக்கி பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளான ஜப்பான் சுற்றுலாப் பயணி பெண் டெல்லியை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்த துன்புறுத்தல்தொடர்பாக 3 பேரை போலீஸ் பிடித்து விசாரித்து வருகின்றனர். நாடு முழுவதும் இந்த துன்புறுத்தல் தொடர்பான வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

மத்திய டெல்லியில் உள்ள பஹர்கஞ்ச் என்ற இடத்தில் இந்த சுற்றுலாப் பயணி தங்கியிருந்தார். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது இப்பகுதியில்  தெருவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சில இளைஞர்கள் அவரை சுற்றிச் சூழ்ந்து கொண்டனர். அவர் அவர் மீது சாயத்தைப் பூசியும், கலர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் அட்டகாசம் செய்தனர். மிகவும் மோசமான முறையில் வலுக்கட்டாயமாக நடந்து கொண்டதால் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் அவர்களது பிடியிலிருந்து அவர் விடுபட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.



இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட அத்தனை பேரையும் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவின் பெயரை இவர்கள் சர்வதேச அளவில் கெடுத்து விட்டதாக பலரும் குமுறல் வெளியிட்டிருந்தனர். ஆனால் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுக்கவில்லை. மாறாக அவர் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார். வங்கதேசத்திற்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.

தான் வங்கதேசத்திற்கு வந்து விட்டதாகவும், மன ரீதியாக, உடல் ரீதியாக தான் நலமுடன் இருப்பதாகவும் அப்பெண் டிவீட் போட்டுள்ளா்ர். இதற்கிடையே, ஜப்பானிய சுற்றுலாப் பயணியிடம் அத்துமீறி மோசமாக நடந்து கொண்டதாக 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் மைனர் வயது கொண்டவர் ஆவார்.

அந்த வீடியோவில் ஒரு பையன் அப்பெண்ணின் தலையில் முட்டையை உடைக்கிறான். இன்னொரு நபர் அத்துமீறி அந்தப் பெண்ணைப் பிடிக்க முயல்கிறார். இதனால் கோபமடைந்த அப்பெண் அந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்து விட்டு அவர்களது பிடியிலிருந்து தப்பி விலகி செல்கிறார். இதேபோன்று பல சம்பவங்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.