தரையிறங்கியபோது விபரீதம்.. ஜெட் விமானத்தில் இடித்து.. தீப்பிடித்து எரிந்த ஜப்பான் விமானம்

Su.tha Arivalagan
Jan 02, 2024,03:50 PM IST
டோக்கியோ:  ஜப்பானில் தரையிறங்கியபோது அங்கு நின்றிருந்த ஜெட் விமானத்தில் இடித்துக் கொண்டதில், பயணிகள் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து போய் விட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும், ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.

டோக்கியோ -ஹனேடா விமான நிலையத்தில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 367 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் தரையிறங்கியது. அப்போது ரன்வேயின் மறுபக்கம் நின்று கொண்டிருந்த கோஸ்ட்கார்ட் விமானத்தில் பயணிகள் விமானம் உரசி மோதிக் கொண்டது.

இதனால் பயணிகள் விமானத்தின் வால் பகுதியில் தீப்பிடித்துக் கொண்டு விமானத்தில் பரவ ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் நிறுத்தப்பட்டு விமானத்திலிருந்த பயணிகள், ஊழியர்கள் வேகம் வேகமாக வெளியேற்றப்பட்டு விட்டனர். இதனால் பேராபத்து தவிர்க்கப்பட்டது.



ஜப்பானில் நேற்றுதான் சுனாமியும், கடும் நிலநடுக்கமும் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அதிர்ச்சி போவதற்குள் இன்று விமானம் தீப்பிடித்து எரிந்தது ஜப்பான் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. புத்தாண்டு பிறந்த நேரமே சரியில்லையே என்று பலரும் புலம்புகிறார்களாம்.