பானிபூரியை ருசித்து சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்.. ரசித்துப் பார்த்த பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Mar 21, 2023,11:21 AM IST

டெல்லி:  டெல்லி வந்திருந்த ஜப்பான் நாட்டு பிரதமர் பியூமியோ கிஷிடா, இந்தியாவின் பிரபலமான பானிபூரியை ருசித்துச் சாப்பிட்டார். அதை அருகில் இருந்து ரசித்துப் பார்த்து மகிழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி.


ஜப்பான் பிரதமர் கிஷிடோ, இந்தியா வந்திருந்தார். டெல்லியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத் இல்லத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், கிஷிடாவும் பல்வேறு உலகப் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்தியா பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என்று தனது பேச்சின்போது வலியுறுத்தினார் கிஷிடா.


உக்ரைன் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் முக்கிய பேச்சு நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்தியாவின் பல்வேறு வகையான தின்பண்டங்களை உண்டு ருசித்தார் கிஷிடா. 





குறிப்பாக பானிபூரியை அவர் சாப்பிட்டபோது ரொம்பவே ருசித்துச் சாப்பிட்டார். முதலில் ஒரு பானிபூரியை அவர் வாங்கி சாப்பிட்டார்.. வாயில் அது போன சிறிது நேரத்தில் இன்னொன்று வேண்டும் என்று கேட்டு சப்புக் கொட்டி சாப்பிட்டார். அதை அருகில் இருந்து பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இன்னொன்று வைங்க என்று ஊழியரிடம் கூறினார். மேலும் கிஷிடா சாப்பிடுவதைப் பார்த்து புன்னகைத்தபடி ரசித்தார் பிரதமர் மோடி.


27 மணி நேரம் இந்தியாவில் தனது பயணத்தை செலவிட்ட கிஷிடா, மே மாதம் ஹீரோஷிமாவில் நடைபெறும் ஜி 7 மாநாட்டுக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை உடனடியாக பிரதமரும் ஏற்றுக் கொண்டார். இந்த பயணத்தின்போது ரூ. 18,000 கோடி மதிப்பிலான ஜப்பான் கடன் தொடர்பான ஒப்பந்தத்திலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இது மும்பை - அகமதாபாத் ஹை ஸ்பீட் ரயில் திட்டம் தொடர்பானது.