வரலாற்றிலேயே முதல் முறையாக...  இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி.. திரிகோணமலையில் கோலாகலம்!

Meenakshi
Jan 06, 2024,12:02 PM IST

திரிகோணமலை: வரலாற்றிலேயே முதன் முறையாக இலங்கை திரிகோணமலையில் சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் மிக பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது.


இலங்கையில் இன்று முதல் ஒரு வாரகாலத்திற்கு பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு முதல் முறையாக இன்று திரிகோணமலையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும் என்பதால் ஒட்டுமொத்த இலங்கையும் ஆர்வமாகியுள்ளது.




இலங்கையில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பல நாடுகளிலில் இருந்து திரிகோணமலைக்கு ஏராளமானோர் வந்துள்ளனர். பொங்கல் பண்டிகையும், ஜல்லிக்கட்டு போட்டியும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. இதுவரை தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று முதல் இலங்கையிலும் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாகவே திரிகோணமலையில், மாடுபிடி வீரர்கள், மாடுகள்,வாடிவாசல் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.


இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் தலைமையில், சுற்றுலா துறை சார்பில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.  சம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு  தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 200 காளைகளும், 100க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.




பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.