அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. "வர்ணனை" சரியில்லையேண்ணே.. தீயா இருக்கணுமால்லியா!

Su.tha Arivalagan
Jan 17, 2024,06:36 PM IST

மதுரை:  ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது அந்த அழகான வரணனைதான் டாப்பாக இருக்கும்.. மாடு பாய்ந்து வருவதையும், அதை பிடிக்கும் வீரர்களின் வீரத்தையும், மாடு தப்பிச் செல்வதையும் அப்படி ரசித்து கிராமத்து வாசனை கலந்து பேசித் தரும்போது.. கேட்கவே ஒரு கெத்தாக இருக்கும்.. ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அந்த வர்ணனை இன்று மிஸ்ஸிங்!


மதுரையைப் பொறுத்தவரை மொத்தம் 3 ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த மூன்றுமே உலகப் புகழ் பெற்றவை. இதனால்தான் மற்ற ஊர் ஜல்லிக்கட்டுகளை விட இந்த போட்டிகளின் மீது மொத்தப் பேரின் பார்வையும் விழுந்திருக்கும்.


இந்த முறை அவனியாபுரத்தில் நடந்த முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியை செங்குட்டுவன் என்பவர் வர்ணனை செய்தார். அவரது வர்ணனை அட்டகாசமாக இருந்தது. மாடுகள் தாவி வந்த லாவகத்தையும், பிடிபடாமல் தப்பிச் சென்ற மாடுகளையும், மாடுகளை தீரத்துடன் போராடிப் பிடித்த இளைஞர்களையும் அவர் வர்ணித்த விதம் அட்டகாசமாக இருந்தது. கேட்கவும் நன்றாக இருந்தது. அவர் மட்டுமே வர்ணனை செய்ததால் குழப்பமில்லாமல் தெளிவாக போனது.




மற்ற விளையாட்டுப் போட்டிகள் இதில் வர்ணனை செய்ய முடியாது. மாறாக மாடு பெயர், உரிமையாளர் பெயர் உள்பட எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட மொத்த ஜல்லிக்கட்டையும் இவர்தான் ஒருங்கிணைப்பார். அப்படிப் பொறுப்பான வேலை அது. அவனியாபுரத்தில் அது சரியாக நடந்தது. அதேபோல பாலமேட்டிலும் சூப்பராக இருந்தது.


பாலமேட்டில் பேசிய வர்னணையாளர் மொத்த போட்டியையும் தனது கட்டுக்குள் சூப்பராக வைத்திருந்தார். எல்லா டீட்டெய்லையும் தவறில்லாமல், தவறாமல், எதுவும் மிஸ் ஆகாமல் சிறப்பாக கூறி போட்டியை அழகாக வழி நடத்தினார். யாராவது இடையில் குறுக்கிட்டுப் பேசினால் டக்கென்று அவர்களை கட் செய்து ஸ்டாப் செய்தும் வர்ணனையை கட்டுக்குள் வைத்திருந்தார். இதனால் குழப்பமில்லாமல் போனது.


ஆனால் அலங்காநல்லூரில் இது மிகப் பெரிய மிஸ்ஸிங் ஆக இருந்தது. ஏகப்பட்ட பேர் பேசினார்கள். யார் என்ன பேசினார்கள் என்பதைக் கவனிப்பதே பெரும் குழப்பமாக இருந்தது. ஆளாளாக்கு ஒரு பக்கம் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர ரசனையான வர்ணனையைக் கேட்க முடியவில்லை. அதேபோல மாடுகளை அவிழ்த்து விடுவதும் கூட தாமதமாகவே இருந்தது. டக் டக்கென்று மாடுகளும் வரவில்லை. மாடுகள் பல திரும்ப வாடி வாசலுக்குள்ளேயே ரிட்டர் ஆகிச் சென்றன. இதனால் போட்டி தாமதமாகவே போய்க் கொண்டிருந்தது.


வர்ணனையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் போட்டி ஆரம்பத்திலிருந்தே குழப்பமாகவே இருந்தது. இதை வரும் காலத்தில் தவிர்க்க வேண்டும். காரணம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. அத்தனை பேரும் பார்க்கும் இந்தப் போட்டியை பிசிறு இல்லாமல்.. ச்சும்மா காளை சீறிப் பாய்வது போல இருந்தால்தான் நேரில் பார்ப்போரும், டிவியில் பார்ப்போரும் அதை ரசித்துப் பார்க்க முடியும்.


உள்ளூரிலேயே சிலரை இதற்காக டிரெய்னிங் கொடுத்தால் கூட பரவாயில்லை.. ஊருக்கு நாலு பேரை தெளிவான முறையில் வர்ணனை செய்யும் வகையில் பயிற்சி கொடுத்து விட்டால், வருடாந்திர ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அட்டகாசமாக கொண்டு போக முடியும். விழாக் கமிட்டிகள் இதுகுறித்து யோசிக்கலாம்.


அதுக்காக யாராவது போய் ஆர்.ஜே. பாலாஜியை கூட்டிட்டு வந்துராதீங்க.. காளைகள் மட்டுமல்ல.. காண்போரும் மிரண்டு ஓடிப் போய் விடுவார்கள்!