"மகனைப் பிரித்து விட்டார்.. என்ன மந்திரம் போட்டாரோ".. மருமகள் மீது ஜடேஜா தந்தை கோபம்!

Su.tha Arivalagan
Feb 09, 2024,05:57 PM IST

அகமதாபாத்: எனது மகனின் திருமணத்திற்குப் பிறகு நாங்கள் பிரிந்து விட்டோம். நான் ஜாம் நகரில் தனியாகத்தான் வசிக்கிறேன். எனது மகன் அவனது குடும்பத்துடன் இதே ஊரில்தான் தனியாகத்தான் இருக்கிறான். என்னைப் பார்ப்பதில்லை. எனது மருமகள் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. என்னை எனது மகன் கண்டு கொள்வதில்லை என்று ரவீந்திர ஜடேஜாவின் தந்தை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கும், அவரது தந்தைக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அவரது தந்தை கொடுத்த ஒரு பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை நம்ப வேண்டாம், புறக்கணியுங்கள் என்று ஜடேஜா அவசரம் அவசரமாக விளக்கம் அளித்துள்ளார்.




இந்திய அணியின் ஆல்ரவுண்டராக வலம் வரும் ஜடேஜா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் வலம் வருகிறார். இவரது மனைவி பெயர் ரிவபா ஜடேஜா. இவர் பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார்.


இந்த நிலையில் ஜடேஜாவின் தந்தை தனது மகன் குறித்தும் மருமகள் குறித்தும் அளித்துள்ள பேட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஜடேஜாவின் தந்தை அனிருத்சின் ஜடேஜா திவ்யா பாஸ்கர் இதழுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:


உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்லட்டுமா. எனக்கும், எனது மகனுக்கும், மருமகளுக்கும் இடையே இப்போது எந்த உறவும் இல்லை, தொடர்பும் இல்லை. நான் அவர்களிடம் பேசுவதில்லை. அவர்களும் என்னிடம் பேசுவதில்லை. அவர்களது திருமணம் முடிந்த 2, 3 மாதத்திலேயே பிரச்சினை தொடங்கி விட்டது.




நான் இப்போது ஜாம் நகரில்தான் தனியாக வசித்து வருகிறேன். எனது மகனும் தனது மனைவியுடன் இதே ஊரில்தான் பங்களாவில் வசித்து வருகிறார். நானும் அவரை பார்ப்பதில்லை, அவர்களும் என்னை வந்து பார்ப்பதில்லை.  அப்படி அவரது மனைவி என்னதான் மந்திரம் போட்டாரோ தெரியவில்லை.


ரவீந்திர ஜடேஜா எனது மகன். அதுதான் எனது இதயத்தை சுட்டெரிக்கிறது. நான் அவருக்கு இந்தக் கல்யாணத்தை செய்து வைத்திருக்கக் கூடாது.  அவர் கிரிக்கெட் வீரராக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த கொடுமையையெல்லாம் நான் சந்தித்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.


கல்யாணமான மூன்று மாதத்திலேயே எனது மருமகள் வந்து எல்லாவற்றையும் அவரது பெயரில் மாற்ற வேண்டும் என்றார். குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்தினார்.  குடும்பம் ஒன்றாக இருக்க அவர் விரும்பவில்லை. தனியாக போய் வாழ ஆசைப்பட்டார். நான் தவறாக இருக்கலாம்.. ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி தவறாக இருக்கலாம்.. சரி.. ஒரு குடும்பத்தில் உள்ள 50 பேருமோ தவறாக இருப்பார்கள்.. நீங்களே சொல்லுங்கள். 




குடும்பத்தில் யாருடனும் அவர்களுக்கு நல்லுறவு இல்லை. மனசு முழுவதும் வெறுப்புணர்வுதான் நிரம்பியிருக்கிறது. நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. எங்களது பேத்தியின் முகத்தைக் கூட நாங்கள் இதுவரை பார்க்கவில்லை. ரிவபாவின் குடும்பத்தினர்தான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிலும் அவர்கள் தலையிடுகிறார்கள். அவர்களுக்கு ரவீந்திரா என்ற வங்கி கையில் கிடைத்து விட்டது.. மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் அவர்.


இந்தப் பேட்டி குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் குற்றச்சாட்டுக்களை உடனடியாக மறுத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதுகுறித்து அவர் கூறுகையில், திவ்யா பாஸ்கரில் வந்துள்ள பேட்டியும் சரி, அதில் உள்ள கருத்துக்களும் சரி முற்றிலும் அபத்தமானது.  எந்த உண்மையும் அதில் இல்லை. அதை நான் முழுமையாக மறுக்கிறேன்.  திட்டவட்டமாக நிராகரிக்கிறேன்.  எனது மனைவியின் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது. இதை கண்டிக்கிறேன். இதை அனைவரும் நிராகரிப்போம் என்று கூறியுள்ளார் ஜடேஜா.