Meloni.. எனக்கு உடம்பு சரியில்லைன்னதும்.. ரொம்ப ரொம்ப நன்றிங்க.. நெகிழ்ந்து போன மெலோனி!

Su.tha Arivalagan
Jan 01, 2024,06:47 PM IST

மிலன்: உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியாவில் ஏகப்பட்ட ரசிக்களை ஈர்த்து வைத்துள்ள, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு உடம்பு சரியில்லையாம். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி நீளமான பதிவு போட்டுள்ளார்.


இத்தாலி பிரதமராக இருப்பவர் ஜார்ஜியா மெலோனி. எப்போதும் புன்னகை பூத்த முகமாக காணப்படும் மெலோனிக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள். குறிப்பாக இந்தியாவில் ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் இவர் எடுத்துக் கொண்ட செல்பி பிரபலமானது. அதை விட அந்த செல்பியைப் போட்டு விட்டு, "மெலோடி" என்று இவரே ஹேஷ்டேக் போட்டதும் அது காட்டுத் தீயாகப் பரவியது.


மெலோனிக்கு நம்ம நாட்டில் இன்னும் ரசிகர் மன்றம் மட்டும்தான் திறக்கவில்லை. ஆனால் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். எப்போது மெலோனி இந்தியாவுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பிலும் பலர் உள்ளனர்.




இந்த நிலையில் மெலோனிக்கு உடம்பு சரியில்லையாம். இதனால் புத்தாண்டைக் கொண்டாட முடியாமல் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பலரும் அவரிடம் நலம் விசாரித்தவண்ணம் உள்ளனராம்.


இதுகுறித்து ஒரு நீளமான டிவீட் போட்டுள்ளார் மெலோனி. அதில் அவர் கூறியிருப்பதாவது:


எனக்கு சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன. இதனால்தான் வீட்டோடு இருக்க வேண்டியதாயிற்று. இப்போது பரவாயில்லை, கொஞ்சம் நல்லாருக்கு.


பொதுவாக நான் எந்த வேலையையும் ஒத்திப் போட மாட்டேன்.. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக சில வேலைகளை நான் ஒத்திப் போட வேண்டியதாகி விட்டது. இதற்காக மன்னிச்சுங்கங்க. நான் விரைவில் குணமாக வேண்டும் என்று இத்தாலியர்கள் பலரும் எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தீர்கள். அதற்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


உடம்பைக் கவனிச்சுக்க வேண்டாமா, இப்படியா இருப்பீங்க என்று சிலர் என்னுடன் வாதிடவும் செய்தீர்கள். அந்த அன்புக்கும் நன்றி. நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் எனக்கு உணர்த்தியுள்ளார்கள். அதை மறக்க முடியாது.


எல்லாவற்றையும் விட ஒட்டுமொத்த இத்தாலிக்கும் இந்த 2024ம் ஆண்டு வளர்ச்சி, வெற்றி, நம்பிக்கையை அதிகம் தர வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். நாட்டுக்காக எனது முழு சக்தியையும் செலவிடுவேன். அரசுடன் இணைந்து நாட்டின் எதிர்காலத்தை மேலும் சிறந்ததாக்க முயல்வேன். இதில் அனைவருடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார் மெலோனி.