19,000 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்கிறது அக்சன்சர்.. ஐடி உலகம் அதிர்ச்சி!

Su.tha Arivalagan
Mar 24, 2023,03:16 PM IST

கலிபோர்னியா: தகவல் தொழில்நுட்ப ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் புதிய அதிர்ச்சியாக அக்சன்சர் நிறுவனம் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலத்தில் மிகப் பெரிய அளவில் பணியாளர்கள் நீக்கப்படுவது அக்சன்சர் நிறுவனத்தில்தான் என்பதால் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்குறைப்பு மட்டுமல்லாமல் பட்ஜெட் குறைப்பு,  வருவாய் இலக்கு குறைப்பு, லாபக் குறைப்பு என்று பல்வேறு நடவடிக்கைகளையும் அக்சன்சர் அறிவித்துள்ளது.

இதன் மூலம் அக்சன்சர் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 2.5 சதவீதம் பேர் தற்போதைு வேலையை இழக்கின்றனர். வரும் நிதியாண்டில் தனது நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சியானது 8 முதல் 10 சதவீதமாக இருக்கும் என்று அக்சன்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 11 சதவீத வளர்ச்சிக்கு அது திட்டமிட்டிருந்தது. தற்போது அதைக் குறைத்துள்ளது.

2023ம் ஆண்டு ஐடி துறையினருக்கு மிகவும் மோசமான ஆண்டாக மாறியுள்ளது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் வேலை நீக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கின. அமேஸான், மெட்டா, மைக்ரோசாப்ட், டிவிட்டர்  உள்ளிட்ட நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை நீக்கின. தொடர்ந்து நீக்கியும் வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் ஐடி ஊழியர்கள் பணியை இழந்துள்ளதாக ஒரு புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது.