லோக்சபா தேர்தலில்  திமுக சார்பில் போட்டியிட சீட் வேணுமா?.. இன்று  முதல் விண்ணப்பிக்கலாம்!

Meenakshi
Feb 19, 2024,05:24 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவ விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றனர். முக்கிய கட்சிகள் நாடாளுமன்ற தேர்தல் வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றன. ஒரு சில கட்சிகள் நாடாளுமன்ற வேலைகளை தொடங்காமலும், கூட்டணி குறித்த முடிவு தெரிவிக்காமலும் இருந்து வருகின்றன.




தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை விரைவில் முடியவுள்ளது. மறுபக்கம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  தற்போது வேட்பாளர் விருப்ப மனுக்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளது திமுக.


அதன்படி விண்ணப்ப படிவ விநியோகம் இன்று முதல் கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது. வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 50,000 எனவும், அதற்கான விருப்ப மனுவை ரூ. 2000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி  மாலை 6 மணிக்குள் செலுத்த வேண்டும் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.


விருப்ப மனு விநியோகம் தொடங்கியதைத் தொடர்ந்து  அண்ணா அறிவாலயம் களை கட்டியுள்ளது. திமுகவினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வாங்கி வருகின்றனர்.