இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மாரடைப்பால் மரணம்.. சந்திரயான் 3க்கு கவுண்ட்டவுன் கூறியவர்!

Su.tha Arivalagan
Sep 04, 2023,10:15 AM IST
 சென்னை: இஸ்ரோ மூத்த விஞ்ஞானி என். வளர்மதி கடுமையான மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்தியாவின் முதலாவது ரேடார் இமேஜிங் செயற்கைக் கோளான ரிசாட் 1 திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் வளர்மதி.

சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டபோது அதற்கான இறுதி கவுன்ட்டவுன் கூறியவர் வளர்மதி. பெரும்பாலான விண்கல ஏவுதலின்போது கவுன்ட்டவுன் கூறுவது வளர்மதியாகத்தான் இருக்கும். ஆதித்யா விண்கலம் ஏவப்பட்டபோது அவர் இல்லை. இதனால் பலரும் வியப்படைந்தனர். ஆனால் அவரது மறைவுச் செய்தி தற்போது வெளியாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



சனிக்கிழமை மாலை அவர் சென்னையில் மரணமடைந்துள்ளார். தற்போதுதான் அந்த செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் டாக்டர் பிவி வெங்கடகிருஷ்ணன் இதுகுறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்,  இனி இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதலின்போது வளர்மதி மேடத்தின் குரல் கேட்காது. சந்திரயான் 3 ஏவுதல்தான் அவரது கடைசி கவுன்ட்டவுன். எதிர்பாராத மரணம். மிகவும் சோகமாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

வளர்மதியின் மறைவுக்கு பலரும் இரங்கலும், அதிர்ச்சியும், வருத்தமும் வெளியிட்டு வருகின்றனர். 

உலக அளவில் இந்தியாவை பெருமைப்படுத்திய திட்டம் சந்திரயான் 3. அந்த சாதனையை இந்தியாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்த ராக்கெட் ஏவுதலின்போது அதற்குரிய கவுன்ட்டவுன் கூறிய பெருமையோடு 
வளர்மதியின் வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது பெரும் துயரத்துக்குரியதாகும். சந்திரயான் 3 சாதனை நினைவில் இருக்கும் வரை வளர்மதியும் அனைவரின் நினைவிலும் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

அரியலூரைச் சேர்ந்தவர் என் வளர்மதி. இந்தியாவின் முதல் ரேடார் சென்சிங் செயற்கைக் கோளான ரிசாட்1 செயற்கைக் கோள் திட்ட இயக்குநராக இருந்தவர். செவ்வாய் கிரக ஆய்வுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இவர் பணியாற்றியுள்ளார்.  தமிழ்நாடு அரசு ஏற்படுத்திய அப்துல் கலாம் விருதை முதலில் பெற்ற விஞ்ஞானி வளர்மதிதான்.

1984ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தார்.  இவரது கணவர் பெயர் வாசுதேவன். வங்கி அதிகாரி. இந்தத் தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.