சோம்நாத்தை தாக்கிய புற்றுநோய்.. 4 நாட்கள் மருத்துவமனையில்.. 5வது நாளிலிருந்து மீண்டும் பணியில்!

Su.tha Arivalagan
Mar 04, 2024,06:52 PM IST

டெல்லி: இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.  சூரியனை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நாளன்றுதான் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.


அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர்   2ம் தேதி சோம்நாத்துக்கு புற்றுநோய் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. தனது வயிற்றில் வலி நிலவி வந்ததால் ஒரு ஸ்கேன் செய்து பார்க்கலாமே என்று போனபோதுதான் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.




புற்றுநோய் வந்திருப்பதை அறிந்து சோம்நாத்தும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து டார்மாக் மீடியா நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் சோம்நாத்தே விவரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சந்திரயான் 3 விண்கலம் செலுத்தப்பட்ட சமயத்தில் எனக்கு வயிற்றில் உபாதை ஏற்பட்டது. அப்போது அதுகுறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை. எனக்கும் தெளிவாக எதுவும் புரியவில்லை. புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.


ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட்ட அன்று ஒரு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காகப் போனபோதுதான் வந்திருப்பது இரைப்பைப் புற்றுநோய் என்று தெரிய வந்தது. எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. எனது குடும்பத்தினரும் அதிர்ந்து விட்டனர். இஸ்ரோவில் உள்ள எனது சகாக்களும் அதிர்ச்சியாகி விட்டனர்.


இதையடுத்து  மேலும் சில ஸ்கேன் சோதனைகளை செய்வதற்காக நான் சென்னைக்கு வந்தேன். அங்கு புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டது. எனது தொழில்முறை சவால்களுடன், இந்த புதிய சவாலையும் நான் சந்திக்க நேரிட்டது. முதலில் ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து கீமோதெரபியும் கொடுக்கப்பட்டது.


நான்கு நாட்கள் நான் மருத்துவமனையில் இருந்தேன். 5வது நாளில் எனது பணியைத் தொடர்ந்தேன். பிறகு எனக்கு வலி இல்லை. தொடர்ந்து செக்கப்புக்குப் போக வேண்டும், ஸ்கேன்களும் பார்க்க வேண்டும். இப்போது நான் முழுமையாக  குணமடைந்து விட்டேன். வழக்கம் போல எனது பணிகளையும் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார் சோம்நாத்.