இன்சாட் 3டிஎஸ் செயற்கைக் கோளுடன்.. பிப். 17ல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி ராக்கெட்!

Meenakshi
Feb 10, 2024,05:16 PM IST
சென்னை: வானிலை ஆய்வுகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இன்சாட் 3 டிஎஸ் செயற்கைக் கோள், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வரும் 17ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆய்வுகளுக்காக இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.  வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்த இன்சாட் வகை செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டு வருகின்றன. 16 வது முறையாக ஜி எஸ் எல் வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய கடல்சார் ஆய்வு மையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கைக்கோளில் ஆறு சேனல் இமேஜர்கள் உட்பட 25 ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் புவியின் பருவநிலை மாறுபாடுகளை நுட்பமாக கண்காணித்து வானிலைக்கான தகவல்களை  துல்லியமாக வழங்கும்  என்று கூறப்படுகிறது.



புயல், கனமழை உட்பட இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளலாம் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து வருகிற 17-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது.  இன்சாட் செயற்கைக்கோள் பாகங்கள் மற்றும் இறுதி கட்ட சோதனைகள் பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.