state of war : உச்ச கட்ட பதற்றத்தில் இஸ்ரேல்...போர் அறிவிப்பு வெளியீடு

Aadmika
Oct 07, 2023,01:23 PM IST

ஜெருசலேம் : இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நிலவி வரும் மோதல் தற்போது போராக மாறி உள்ளது. இஸ்ரேலின் பல்வேறு நகரங்கள் மீது பாலஸ்தீனம் குண்டு மழை பொழிந்து வருகிறது.


இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. தற்போது இது போராக மாறி உள்ளது. இஸ்ரேலும் போரை அறிவித்துள்ளது. இஸ்ரேலின் பல நகரங்களின் மீது 20 நிமிடங்களில் 5000 ராக்கெட்களை  காசா முனையில் இருந்து பாலஸ்தீனம் ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலுக்குள் நுழைந்துள்ள பாலஸ்தீனிய ஆயுதக் குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 




பாலஸ்தீனத்தின் இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும் களத்தில் இறங்கி அதிரடியாக பதிலடி கொடுக்க துவங்கி உள்ளனர்.  போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக தற்போது இஸ்ரேல் பகிரங்கமாக அறிவித்துள்ளது. 


இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்திற்கும் இடையே உள்ள காசா பகுதி தான் இரு நாடுகள் இடையேயான போருக்கு காரணம். தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ள காசா, ஹமாஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக இஸ்ரேல் கருதுகிறது. இந்த அமைப்பினர் தான் பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இவர்களுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறி வருகிறது. 


அதே சமயம் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவுதாகவும், அமெரிக்காவின் ஆதரவுடன் காசாவை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சி செய்து வருவதாகவும் பாலஸ்தீனம் குற்றம்சாட்டி வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த மோதல் போராக மாறி உள்ளது. இதனால் காசா பகுதி மக்கள் உயிர் பயத்தில் உள்ளனர்.