சிரியாவில் பயங்கர தாக்குதல்.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பலி.. துருக்கி அதிபர் தகவல்

Su.tha Arivalagan
May 01, 2023,10:27 AM IST

இஸ்தான்புல்: சிரியாவில் துருக்கி உளவுப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதாக துருக்கி அதிபர் ரிசப் தய்யிப் எர்டகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து எர்டகன் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையின்போது, தயீஷ் பகுதியில் நடந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக கருதப்படும் அபு ஹூசேன் அல் குரேஷி கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. துருக்கி ரகசியப் படையினர் நடத்திய தாக்குதல் இது என்றார் அவர்.



ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக இருந்து வந்த அபு ஹசன் அல் ஹஷ்மி அல் குரேஷி கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த அமைப்பின் தலைவராக அபு ஹூசேன் அல் குரேஷி செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. அவரைத்தான் தற்போது கொன்று விட்டதாக துருக்கி அறிவித்துள்ளது. 

உள்ளூர் போலீஸாரின் உதவியோடும், சிரியா ராணுவத்தின் உதவியோடும் துருக்கி உளவுப் பிரிவு ஏஜென்டுகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்ரின் என்ற வட மேற்கு சிரியாவில் உள்ள ஜின்டிரஸ் என்ற மண்டலத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி வருகிறது. 

அங்குள்ள ஒரு பண்ணை வீட்டில்தான் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பதுங்கியிருப்பதாக கூறப்பட்டது. அந்த இடத்தை முற்றுகையிட்டு அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக உள்ளூர் மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.  அது ஒரு பள்ளியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2020ம் ஆண்டு துருக்கிப் படையினர் சிரியாவின் வடக்குப் பகுதியில் முகாமிட்டுள்ளனர். அங்குள்ள மொத்த பிராந்தியங்களையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.  ஏற்கனவே ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் பல்வேறு தாக்குதல்களை நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில் அதன் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

அடுத்தடுத்து பல்வேறு ஐஎஸ்ஐஎஸ் முக்கியத் தலைவர்கள் சமீப காலமாக கொல்லப்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் ஐஎஸ்ஐஎஸ் மிகப் பெரிய சக்தியாக திகழ்ந்தது. சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை அது கட்டுக்குள் வைத்திருந்தது.  ஐரோப்பாவில் பல தற்கொலைப் படைத் தாக்குதல்களையும் அது நடத்தி வந்தது.

கடந்த 2019ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கீர் அல் பாக்தாதி வட மேற்கு சிரியாவில் வைத்து அமரிக்கப் படையினரால் கொல்லப்பட்டார். அது முதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பலவீனமடையத் தொடங்கியது. ஆனாலும் இன்னும் அது முழுமையாக நிர்மூலமாக்கப்படவில்லை.



பத்து வருஷமா நான் பொங்கலே சாப்பிட்டதில்லை.. முரளி விஜய் பொளேர் தகவல்!