ஷவர்மாவைத்தான் சாப்பிட விடாம பண்ணீங்க.. இப்ப பானி பூரியா?.. கேன்சர் வருதாம்.. ஷாக் தகவல்கள்!

Su.tha Arivalagan
Jul 03, 2024,05:42 PM IST

சென்னை:   கர்நாடக மாநிலத்தில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


உணவுப் பண்டங்கள் இன்று விஷமாகி வருகின்றன.  காரணம், சுவைக்காகவும், நிறத்திற்காகவும், கண்டதையும் அதில் சேர்க்க ஆரம்பித்து விட்டனர்.. விளைவு, புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, கணைய பாதிப்பு என்று பல உடல் உபாதைகளை மக்கள் சந்திக்கின்றனர். விற்பவர்கள் விற்று விட்டுப் போய் விடுவார்கள்.. ஆனால் வாங்கி ருசித்து ரசித்துச் சாப்பிட்ட மக்கள்தான் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.




இப்படித்தான் முன்பு ஷவர்மா பிரபலமாகி வந்தது. வெளிநாட்டு உணவு வகையான ஷவர்மா தமிழ்நாட்டில் படு வேகமாக பாப்புலரானது. ஆனால் அதிலும் ஆபத்து வந்து சிலர் மரணத்தைத் தழுவவே ஷவர்மா விற்பனை செய்ய தடையே விதிக்கப்பட்டது. இப்படியாக ஷவர்மாவுக்கு மூடு விழா காணப்பட்டது.


சில மாதங்களுக்கு முன்பு பஞ்சு மிட்டாய்க்கும் சிக்கல் வந்தது. சிவப்பு நிறத்தில் பார்க்கவே புசுபுசுவென இருக்கும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் கலக்கப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஆய்வு நடத்திய அதிகாரிகள், சிவப்பு நிற பஞ்சு மிட்டாயை விற்பனை செய்ய தடை விதித்தனர். இதனால் மக்கள் தற்போது வெள்ளை நிற பஞ்சு மிட்டாயை வாங்கிச் சாப்பிட்டு வருகின்றனர்.


இந்த பரபரப்பு அடங்கிய நிலையில் தற்போது பானி பூரிக்கு சிக்கல் வந்துள்ளது. கர்நாடகத்தில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கக் காரணமான சில காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பானி பூரி என்பது வட இந்தியாவில் பிரபலமானது. பானி என்றால் தண்ணீர், பூரி என்றால் நாம் சாப்பிடும் சாதாரண பூரிதான்.. குட்டி சைசில் இருக்கும். அந்த பூரிக்குள் புதினா, மல்லி, அரிந்த வெங்காயம் மற்றும் சுவையான தண்ணீரை நிரப்பித் தருவார்கள்.. அதுதான் பானி பூரி.


இந்த பானி பூரியில்தான் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் கலந்திருப்பதாக கர்நாடகத்தில் கண்டறிந்துள்ளனர்.  இதுகுறித்து வந்த தகவலைத் தொடர்ந்து கர்நாடக உணவுக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த பானி பூரியில் தடை செய்யப்பட்ட நிறமியைப் பயன்படுத்துவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கோபி மஞ்சூரியன், கபாப் ஆகியவற்றிலும் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிறமிக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறமியைத்தான் தற்போது பானி பூரியில் பயன்படுத்துகிறார்களாம்.




கிட்டத்தட்ட 250 பானி பூரி சாம்பிள்கள் எடுத்துப் பரிசோதிக்கப்பட்டனவாம். அதில் 40க்கும் மேற்பட்ட சாம்பிள்களில் இந்த நிறமி பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாம். அதாவது பிரில்லியன் ப்ளூ, டார்டிராசின், சன்செட் எல்லோ ஆகிய நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை சாப்பிட்டால் உடல் உறுப்புகள் சேதமடையும், புற்று நோய் வரும்.


கர்நாடகத்தில் பானி பூரியில் தடை செய்யப்பட்ட, புற்றுநோயை உண்டாக்கும் நிறமிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதைத்  தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வட இந்தியர்கள்தான் பெருமளவில் பானி பூரியை விற்பனை செய்கிறார்கள். ஆனால் அதிக அளவில் அதை வாங்கிச் சாப்பிடுவது என்னவோ  நம்ம மாநிலத்தவர்கள்தான். தற்போது நம்ம மாநிலத்தவர்களும் கூட இதை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.


எந்த உணவாக இருந்தாலும் கலரோ, சுவையோ தூக்கலாக இருந்தால் அதில் ஆபத்து மறைந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொண்டால், ஆரோக்கியமான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவதும் எளிதாகும். உணவும், ருசியும் அவசியம்தான்.. ஆனால் ஆரோக்கியமும் முக்கியம்.. ஸோ, கவனமாக சாப்பிடுங்க.