"உங்கள் பலத்தை பயன்படுத்துங்க.. இஸ்ரேலை அடக்குங்க".. பிரதமர் மோடிக்கு ஈரான் கோரிக்கை

Su.tha Arivalagan
Nov 07, 2023,10:05 AM IST

டெல்லி: இந்தியா தனது அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கோரிக்கை விடுத்துள்ளார்.


பிரதமர் மோடியுடன், அதிபர் ரைசி, தொலைபேசியில் பேசும்போது இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்தார். 


காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவில் இதுவரை கிட்டத்தட்ட 10,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். போர் தொடர்ந்து கொண்டுள்ளது. இந்தப் போரால் குழந்தைகள்தான் மிக மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.




போரை நிறுத்த பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் கூட இஸ்ரேல் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஐ.நா.வின் கோரிக்கைகளையும் அது நிராகரித்து விட்டது. உலக நாடுகளின் ஒருமித்த கோரிக்கையையும் அது புறம் தள்ளி விட்டது. தன் இஷ்டத்திற்கு அது செயல்பட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலின் அத்தனை அட்டகாசங்களுக்கும் துணை போவதால் இஸ்ரேலை கட்டுப்படுத்த யாராலும் முடியவில்லை.


இந்த நிலையில் ஈரான் அதிபர் ரைசி, பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது காஸாவில் போரை நிறுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும். தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.  மேற்கத்திய நாடுகளின் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட இந்தியா எந்த அளவுக்குப் போராடியது என்பதை நாம் மறந்து விட முடியாது அணி சேரா நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்வதையும் நாம் மறந்து விடக் கூடாது.


இஸ்ரேல் ராணுவம், காஸாவில் அப்பாவி மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தி வருகிறது. போர்க் குற்றத்தைப் புரிந்து கொண்டிருக்கிறது. இதை இந்தியா தன்னால் ஆன அனைத்து வழிகளிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.


இஸ்ரேல் போரை நிறுத்த உலக அளவில் மேற்கொள்ளப்படும் எல்லா வகையான முயற்சிகளுக்கும் ஈரான் ஆதரவு தரும்.  காஸா மக்களுக்கு உதவும் முயற்சிகளுக்குத் துணை நிற்கும். தொடர்ந்து பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது, சுதந்திர நாடுகளின் கோபத்தை அதிகரித்துள்ளது. இது மிகப் பெரிய விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்றார் இப்ராகிம் ரைசி.


பிரதமர் மோடி தனது தரப்பில் கூறுகையில், போரை நிறுத்த வேண்டும். மனிதாபிமான உதவிகள் அப்பாவி மக்களை சென்றடைய வேண்டும்.  விரைவில் அப்பகுதியில் அமைதி திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்