ஈராக்கில் உள்ள.. இஸ்ரேல் உளவு மையத்தை ஏவுகணை வீசித் தாக்கித் தகர்த்த ஈரான்!

Su.tha Arivalagan
Jan 16, 2024,10:25 AM IST

டெஹரான்: ஈராக்கிலிருந்து செயல்பட்டு வரும் இஸ்ரேல்  மையத்தை ஏவுகணை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இது இஸ்ரேலின் உளவு தலைமை அலுவலகம் என்று ஈரான் கூறியுள்ளது. சிரியா மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளைக் குறி வைத்து ஈரான் பலமுனை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்தத் தாக்குதலில் ஈராக்கில் உள்ள இஸ்ரேல் மையம் முற்றிலும் தகர்ந்து தரைமட்டமானதாக தகவல்கள் கூறுகின்றன. குர்திஸ்தான் தலைநகரான அர்பில் நகரில் இந்த தலைமை அலுவலகம் அமைந்திருந்தது. இங்கிருந்தபடி, ஈரானுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை இஸ்ரேல் செய்து வந்ததாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.




தாக்குதல் நடந்த சமயத்தில் அங்கிருந்த நான்கு பேர் கொல்லப்பட்டனர், ஆறு பேர் படுகாயமடைந்ததாக குர்திஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.  கொல்லப்பட்டவர்களில் ஒருவரது பெயர் பெஷ்ரா டிசாயி. இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். 


இதேபோல சிரியாவிலும் சில நிலைகளை குறி வைத்து ஈரான் படையினர் தாக்கியுள்ளனர். ஈரானுக்கு எதிரான தீவிரவாதிகளின் தளங்கள் இவை என்று ஈரான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும் இந்தத் தீவிரவாதிகள்தான் சமீபத்தில் ஈரானின் கெர்மான் மற்றும் ரஸ்க் ஆகிய நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணம் என்றும் ஈரான் கூறியுள்ளது.


ஈரானின் இந்த அதிரடித் தாக்குதல்களை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஈராக்கின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் செயல் இது என்று அமெரிக்கா கூறியுள்ளது.