பாகிஸ்தான் பக்கம் திரும்பிய ஈரான்.. தீவிரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல்.. பரபரப்பு

Su.tha Arivalagan
Jan 17, 2024,06:36 PM IST

டெஹரான்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஈரான் ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஜெய்ஷ் அல் அதில் என்ற தீவிரவாத அமைப்பின் 2 முகாம்களை தாக்கி அழித்ததாக ஈரான் கூறியுள்ளது. ஈரானிலிருந்து ஏவுகணைகள் மூலம் இந்த் தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஈரானின் இந்த அதிரடித் தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. 


ஈராக், சிரியாவில் இஸ்ரேலிய நிலைகளைக் குறி வைத்து ஈரான் தாக்கிய அடுத்த நாளே பாகிஸ்தான் பக்கம் அது திரும்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் செயலால் பிராந்தியத்தின் அமைதிச் சூழல் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.




பாகிஸ்தான் - ஈரான் எல்லைப் பகுதியில், ஜெய்ஷ் அல் அதில் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் அடிக்கடி ஈரான் ராணுவத்தினருடன் மோதலில் ஈடுபட்டு வந்தனர். இதனால்தான் அவர்களின் நிலைகளைத் தாக்கி அழித்துள்ளது ஈரான்.


இந்தத் தாக்குதல் குறித்து பலுசிஸ்தான் மாகாண தகவல் துறை அமைச்சர் ஜான் அச்சகாஸி கூறுகையில், இதற்கு நிச்சயம் பாகிஸ்தான் ராணுவம் பதிலடி கொடுக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்புப் பிரிவு இதுவரை எந்த பதிலையும் அளிக்கவில்லை.


அதேசமயம், ஈரான் சர்வதேச விதிமுறைகளை, சட்டங்களை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது வன்மையாக கண்டித்தக்கத்கது.  இது கடும் விளைவுகளை ஏற்படுத்தும். இதை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம், ஈரான் வெளியுறவுத்துறை இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.