விடாமல் துரத்திய ஜடேஜா, தோனி.. கடைசி வரை போராடித் தோற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

Su.tha Arivalagan
Mar 30, 2025,09:21 PM IST

குவஹாத்தி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஒரு சோகமான தோல்வியைத் தழுவியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்ச மற்றும் பீல்டிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியைத் தழுவியது.


மீண்டும் ஒரு மறக்க முடியாத தோல்வியையச் சந்தித்துள்ளது சென்னை. பவுலிங்கில் செய்த சில சொதப்பல்களால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதிக அளவில் ரன் குவிக்க விட்டு விட்டனர். இதன் காரணமாக அவர்களது சேசிங் பெரும் துயரமாக போய் விட்டது. பெரிய ஸ்கோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் சேஸ் செய்ய முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது சென்னை.





ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகச் சிறப்பான பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் செய்து சென்னை அணியை அவுட்ஸ்மார்ட் செய்து விட்டனர். முன்னதாக, ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிதீஷ் ராணா சிஎஸ்கே பந்து வீச்சை நொறுக்கித் தள்ளி 36 பந்துகளில் 81 ரன்களைக் குவித்து அதிர வைத்து விட்டார். ராஜஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் இடையில் சொதப்பினாலும் கூட சவாலான ஸ்கோரை எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை திணறடித்துள்ளனர்.


சஞ்சு சாம்சன் - 20, ரியான் பராக் - 37, சிம்ரன் ஹெட்மயர் - 19 ரன்கள் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் நூர் அகமது 2 விக்கெட்களைச் சாய்த்தார். வழக்கமாக அவரது பந்துகளில் எதிரணியினர் திணறுவார்கள். ஆனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் அதிரடியாக பந்துகளை நொறுக்கி ரன் குவிப்பில் இறங்கினர். அதேபோல அஸ்வின் பந்துகளையும் ராஜஸ்தான் நொறுக்கித் தள்ளியது. இருப்பினும் ராணாவை சிறப்பான ஒரு பந்தின் மூலம் அவுட்டாக்கி ரசிகர்களிடமிருந்து தப்பித்தார் அஸ்வின்.




சென்னை அணியின் சேசிங்கில் பெரிய அளவிலான ஸ்கோரை எடுக்க முடியாமல் முன்னணி வீரர்கள் தடுமாறினர். ரச்சின் ரவீந்திரா பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார். டக் அவுட் ஆகி அவர் வெளியேறினார். ராகுல் திரிபாதி 23 ரன்கள் எடுத்தார். கேப்டன் ருத்துராஜ் கடுமையாக போராடி 63 ரன்களைக் குவித்தார். சிவம் துபே பெரிய ஸ்கோரை அடிக்க  முடியவில்லை. கடைசி ஓவர்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உருவானது.


ஜடேஜாவும், தோனியும் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தனர். ஆனால் தோனி அவுட்டானதால் அந்த நம்பிக்கை தகர்ந்து போனது. ஜடேஜா கடைசி வரை அவுட்டாகாமல் 32 ரன்கள் எடுக்க, தோனி 16 ரன்களில் அவுட்டானார். ஜேமி ஓவர்டன் சிறப்பாக ஆட முயற்சித்தார். ஆனாலும் அவரால் வெற்றியைத் தேடித் தர முடியவில்லை.


ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா மிகவும் புத்திசாலித்தனமாக கடைசி ஓவரைப் போட்டு சென்னை அணியை  நிலை குலைய வைத்து விட்டார்.