ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

Meenakshi
Sep 19, 2024,03:55 PM IST

மும்பை: 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வருகிற நவம்பர் 3 அல்லது 4வது வாரத்தில் நடத்தப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிநாட்டில் வீரர்கள் ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் துபாயில் நடந்தது. அதே போல இந்தாண்டிற்கான ஐபிஎல் ஏலமும் வெளிநாட்டில் நடக்க வாய்ப்புள்ளது. துபாய், அபுதாபி, தோஹா அல்லது சவுதி அரேபியாவில் 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 




குறிப்பாக சவுதி அரேபியாவில் கிரிக்கெட் மீதான முதலீடுகள் அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக,  2025ம் ஆண்டிற்கான மெகா ஏலத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.


ஏலம் பெரும்பாலும் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்தப்படலாம். கடந்த ஜூலை மாத இறுதியில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கூட்டத்தை பிசிசிஐ நடத்தியது. அந்த கூட்டத்தில் பல்வேறு அணிகள் தரப்பிலிருந்து ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ அதுகுறித்து விரிவாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாகத் தான் ஐபிஎல் ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாம்.


பல்வேறு அணிகள் தரப்பில் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முடிவுகள் எடுக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம். மேலும், ரிடென்ஷன் விதிமுறைகள் இம்மாத இறுதிக்குள் வெளியிட பிசிசிஐ  தீவிரமாக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்