தென்றல் புயலானால் எப்படி இருக்கும்?.. சூரியனுக்கே ராக்கெட் விடும்.. அசத்திய "ஆதித்யா" நிகர்ஷாஜி!

Manjula Devi
Mar 08, 2024,09:58 AM IST

சென்னை: "ஒரு தென்றல் புயலாகி வருதே".. என்று ஒரு பாட்டு உண்டு. அப்படி ஒரு தென்றல் புயல் ஆனால் என்ன செய்யும்.. சூரியனில் வீசும் புயல்களை ஆராய ராக்கெட் விடும் திட்டத்துக்கே தலைமை தாங்கும்.. !


இந்தியாவில் சாதனைப் பெண்களுக்கு பஞ்சமே இல்லை.. அப்படிப்பட்ட சாதனைப் பெண்களில் முக்கியமானவர்தான், ஆதித்யா எல்1 திட்ட இயக்குனராக செயல்பட்டு அசத்திய நிகர்ஷாஜி.


பெண்கள் பண்டைய காலங்களில்  அடிமைத்தனமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலைமை மாறி தற்போது சமூகத்தை செதுக்கும் சிற்பியாக உருவாகி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பு  அவர்களின் தந்தையை சார்ந்தும், திருமணத்திற்கு பிறகு கணவரை சார்ந்தும், முதுமையின்போது பிள்ளைகளை சார்ந்தும் வாழ்ந்து வந்த நிலைமை முற்றிலும் உடைக்கப்பட்டு பெண்கள் சமூகத்தில் தனித்து தனி அடையாளமாக,வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.




மாதர்குலங்கள் தங்களுக்கான கொள்கைகளில் தன்னம்பிக்கையுடன் சொந்தக் கால்களில்  நின்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டனர். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை செய்தும் வருகின்றனர். அந்த வரிசையில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த பெண்மணிதான் ஆதித்யா  எல்1 திட்ட இயக்குனர் நிகர்ஷாஜி.


கடந்த ஆண்டு நிலவின் தென்பகுதிக்கு சந்திரயான் 3 என்ற விண்கலத்தை  வெற்றிகரமாக தரை இறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் இரண்டாம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்1 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.  ஆதித்யா எல்1 திட்ட இயக்குனராக பணிபுரிந்தவர்  தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர்ஷாஜி.


யார் இந்த நிகர்ஷாஜி?


நிகர்ஷாஜி, தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஷேக் மீரான் மற்றும் சித்தூன் பீவி தம்பதியருக்கு 2வது மகளாக பிறந்தவர் நிகர்ஷாஜி. அவரது தந்தை ஒரு விவசாயி. தாயார் இல்லத்தரசி‌. நிகர்ஷாஜி 1978 ஆம் ஆண்டு எம் எஸ் ஆர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தவர். அப்போது பொதுத்தேர்வில் 433 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியாக திகழ்ந்தவர். 


இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாக திகழ்ந்தவர். பின்னர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல், தகவல் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். இதனை அடுத்து 1987 ஆம் ஆண்டு யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். இது மட்டுமல்லாமல் பல செயற்கைக்கோள் திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். 


தற்போது மகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார் நிகர்ஷாஜி. இவருடைய கணவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார். தாயைப் போலவே, நிகர்ஷாஜியின் மகனும் ஒரு சயின்டிஸ்ட்தான். சாதாரண ஊரைச் சேர்ந்து, அரசுப் பள்ளியில் படித்தவரான நிகர்ஷாஜி, பெண்களுக்கு மிகச் சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.


பெண்களே இந்தத் துறையில் தான்  சாதிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கட்டாயமும் இல்லை. உங்களுக்கு பிடித்த எந்தத் துறையிலும் உங்களின் திறமையை நிரூபித்து நிகர்ஷாஜி போல் நீங்களும் ஒரு சாதனை பெண்ணாக வலம் வர  எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.